கோட்டாபயவுக்கு எதிராக குற்றப் பிரேரணை? எதிரணி வகுக்கும் திட்டம்
நாட்டுக்காக இந்த அரசாங்கத்தை விரட்டியடிக்க மக்களுடன் கைகோர்க்குமாறு சகல நாடாளுமன்ற உறுப்பினர்களிடமும் எதிரணி நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணா (Harshana Rajakaruna) கோரிக்கை விடுத்துள்ளார்.
நேற்று நாடாமன்றத்தில், சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கை தொடர்பான அறிக்கை மீதான சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கோரிக்கை விடுத்தார்.
இதன்போது மேலும் உரையாற்றிய அவர்,
“ நாட்டு மக்களின் ஆணையை அரசாங்கம் செவிமடுக்காது அரசாங்கம் தொடர்ந்தும் செயற்படுமாயின் அரசாங்கத்திற்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையும், அரச தலைவர் கோட்டாபய ராஜபக்சவுக்கு எதிராக குற்றப் பிரேரணையும் கொண்டுவர எதிர்க்கட்சி தயாராக உள்ளது.
நாட்டு மக்களுடன் நீங்கள் உள்ளீர்கள் என்றால் இந்த இரண்டுக்கும் கைதூக்கியாக வேண்டும். இல்லையேல் நீங்கள் மக்களிடம் செல்ல முடியாது. அரச தலைவரை பதவி நீக்க வேண்டும் என்பதே மக்களின் நிலைப்பாடாகும்.
அதேபோல் அரசாங்கத்தின் மீதும் மக்கள் நம்பிக்கையிழந்துள்ளனர்.
எனவே சகல உறுப்பினர்களும் நாட்டுக்காக இந்தப் பிரேரணையில் கையொப்பமிடுங்கள்” என்றார்.