சிலிநிக்ஸ் - 2023 : கொழும்பில் சங்கமித்த சிறிலங்கா - இந்திய கடற்படைகள்
சிறிலங்கா மற்றும் இந்தியாவின் கடற்படைகளுக்கு இடையிலான இருதரப்பு கடல்சார் பயிற்சியான சிலிநிக்ஸ் - 2023 இன்று கொழும்பில் ஆரம்பமாகியுள்ளது.
10 ஆவது தடவையாக நடைபெறும் இந்தப் பயிற்சியானது எதிர்வரும் 8 ஆம் திகதி வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடல்சார் பயிற்சி

சிறிலங்கா மற்றும் இந்திய கடற்படைகளுக்கு இடையிலான கடல்சார் பயிற்சியானது இரண்டு கட்டங்களாக நடத்தப்படுகின்றது.
முதல் கட்டப் பயிற்சிகள் இன்று முதல் 05 ஆம் திகதி வரை கொழும்பு துறைமுகப் பகுதியிலும் இரண்டாம் கட்டப் பயிற்சிகள் 6 ஆம் திகதி முதல் 8 ஆம் திகதி வரை கொழும்பிற்கு அப்பாலும் நடைபெறுகின்றது.
இந்த பயிற்சிகளின் ஆரம்ப நிகழ்வானது இன்று நடைபெற்றதுடன், இதில் சிறிலங்கா கடற்படையின் கட்டளைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா, இந்திய துணை உயர்ஸ்தானிகர் வினோத் கே.ஜேக்கப், பங்கேற்றனர்.
இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே மற்றும் சிறிலங்காவின் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னக்கோன் ஆகியோர் இந்திய கடற்படையின் கப்பல்களுக்கு விஜயம் செய்யவுள்ளனர்.
சிலிநிக்ஸ் -2023

இரு கடற்படைகளுக்கும் இடையிலான பலதரப்பட்ட கடல்சார் நடவடிக்கைகளில் இயங்குதன்மை, பரஸ்பர புரிந்துணர்வு மற்றும் சிறந்த நடைமுறைகள்/செயல்முறைகளை பரிமாறிக்கொள்ளுதல் ஆகியவற்றை மேம்படுத்துவதை இலக்காக கொண்டு சிலிநிக்ஸ்-2023 கடற்படை பயிற்சி முன்னெடுக்கப்படுகின்றது.
இந்திய கடற்படை சார்பில் ஐஎன்எஸ் கில்தான் மற்றும் ஐஎன்எஸ் சாவித்ரி ஆகிய கப்பல்களும் சிறிலங்கா கடற்படை சார்பில் எஸ்எல்என்எஸ் கஜபாகு மற்றும் எஸ்எல்என்எஸ் சாகாரா ஆகிய கப்பல்களும் இந்தக் கூட்டு கடற்படை பயிற்சியில் பங்கேற்கின்றன.
இதனைத் தவிர இந்திய கடற்படையின் சே-ரக் உலங்குவானூர்தி, டோர்னியர் கடல் கண்காணிப்பு விமானம் ஆகியவற்றுடன், சிறிலங்கா விமானப் படையின் டோர்னியர் மற்றும் பெல் 412 ரக உலங்கு வானூர்திகளும் பயிற்சியில் பங்கேற்கும்.
இந்தப் பயிற்சிகளில் இரண்டு நாட்டு கடற்படைகளினதும் சிறப்பு படையினர் கலந்துகொள்கின்றனர்.
சிலிநிக்ஸ் -2022 கடந்த ஆண்டு விசாகப்பட்டிணத்தில் மார்ச் மாதம் 7 ஆம் திகதி முதல் மார்ச் மாதம் 12 ஆம் திகதி வரை முன்னெடுக்கப்பட்டிருந்தது.