தமிழ் தலைவர்களுடன் பலமான உறவு!! ஏன் இந்த நயவஞ்சக அரசியல்?
தமிழ் தலைவர்களுடன் பலமான உறவைக்கொண்டுள்ள ஹக்கீம், நயவஞ்சக அரசியல் செய்வதை நிறுத்தி மக்கள் பிரச்சினையை தீர்க்க முடியும் என தேசிய காங்கிரசின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ஏ.எல்.எம். அதாஉல்லா (A. L. M. Athaullah) தெரிவித்தார்.
சாய்ந்தமருதில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். தொடர்ந்தும் அங்கு உரையாற்றிய அவர்,
“கல்முனையில் தமிழர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் பிரச்சினை என்றால் படம் காட்ட முடியாது.பேசித்தீர்க்க வேண்டும்.
தமிழர் விடுதலைக் கூட்டணி, தமிழ் தேசியக் கூட்டமைப்பு போன்றோர்களுடன் ரவூப் ஹக்கீம் நெருங்கிய நீண்டகால உறவைக் கொண்டுள்ளார். அந்த நல்ல உறவைக் கொண்டு கல்முனை பிரச்சினை, மூதூர், தோப்பூரின் பிரச்சினைகளை தீர்க்க முடியாதா? அவரது உறவினால் வாழைச்சேனை பிரச்சினைக்கு தீர்வை காணமுடியாதா?
அவர் நாடகம் நடித்துக்கொண்டு வாக்குகளுக்காக இனவாதத்தை பேசிக்கொண்டு நயவஞ்சக அரசியலை அவர் செய்து கொண்டிருக்கிறார்.
இந்த நாட்டிலுள்ள எல்லா மக்களுக்கும் இவர்களைப் பற்றி நன்றாகத் தெரியும். அரசியலை சீராக்க தலைவர் அஷ்ரபின் தலைமையில் ஒன்று சேர்ந்த கூட்டம் நாங்கள். அதில் ஒருவராக இருந்து அடுத்தகட்டங்கள் தொடர்பில் கடும் தெளிவுடன் இருக்கிறோம்.
கடந்த ஆண்டில் நிறைய வடுக்கள் இருந்தது. புதிய ஆண்டில் வடுக்கள் இல்லாமல் நம்மை வாழவைக்கும் ஆண்டாக மலரவுள்ள புத்தாண்டு இருக்க வேண்டும்.
நாட்டில் பஞ்சமில்லாத நிலை உருவாகி சிங்கள, தமிழ், முஸ்லிம், கிறிஸ்தவ மக்கள் ஒருதாய் பிள்ளைகள் போல இனவாதம் இல்லாமல் ஒற்றுமையாக வாழ இந்த ஆண்டு வழிசமைக்கவேண்டும் என்று பிரார்த்திக்கிறேன்” என்றார்.
You may like This