ஈழத்தமிழருக்கு சர்வதேசம் ஒருபோதும் உதவாது! அர்ச்சுனா பகிரங்கம்
சர்வதேசம் ஒருபோதும் தமிழ் மக்களின் இனப்பிரச்சினைக்கு உதவி செய்யாது என நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்தார்.
தனியார் ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலின் போதே அவர் இவ்விடயத்தை தெரிவித்தார்.
வெறுமனே வெளிநாடுகள் பொருளாதாரத்துக்கு மட்டுமே தமது உதவிகளை வழங்கும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இனப்பிரச்சினை
சர்வதேசம் தீர்வைப் பெற்றுத் தரும் என்பதில் தனக்கு நம்பிக்கை குறைவாகவே உள்ளதாகவும் அர்ச்சுனா இதன்போது தெரிவித்தார்.
இதேவேளை, தமிழ் மக்களின் இனப்பிரச்சினை தொடர்பில் எந்த அரசாங்கம் கலந்தாலோசித்து அதற்குத் தீர்வு வழங்க முற்படுகிறதோ, அந்த அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்க தாம் தயாராகவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இவ்விடயம் தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா, “எனது இனத்திற்கு எதிராக செயற்படும் அரசாங்கத்துடன் இருந்துகொண்டு ஒரு இனத்தின் கோடாரி காம்பாக ஒருபோதும் இருக்கமாட்டேன்.
புலம்பெயர் தமிழர்கள்
மாகாண சபைத் தேர்தலுக்கான நிதியை நாடு நாடாக சென்று திரட்டவுள்ளேன். அத்துடன் புலம்பெயர் தமிழர்கள் எனக்கு உதவி செய்ய தயாராக உள்ளனர்.
இனங்களுக்கிடையிலான ஒற்றுமையை ஏற்படுத்துவதே அரசியல்வாதியின் பணி.
அத்துடன் நாட்டிலுள்ள தமிழ், சிங்கள மற்றும் இஸ்லாமிய மக்கள் ஒன்றாக வாழ்வதற்கு, உண்மையான தமிழ் பிரதிநிதி என்ற வகையில் கடமையாற்ற விரும்புகிறேன்.
வட மாகாணம் தற்போது சமூக ரீதியாக மோசமடைந்து விட்டது. 2009 ஆம் ஆண்டுடன் தமிழர்களின் கலாசாரம் சீரழிந்து விட்டது.” என தெரிவித்தார்.
மேலும், LGBTQ எனும் கருப்பொருளை ஊக்குவிக்கக் கூடாது எனவும் அதனை வைத்து பணம் சம்பாதிக்கக் கூடாது எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா வலியுறுத்தியமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
