சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தின மாநாடு : மட்டக்களப்பில் முக்கிய கலந்துரையாடல்!
சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு, வடக்கு–கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தினரால் யாழ்ப்பாணம் தந்தை செல்வா கலையரங்கில் சர்வதேச மாநாடு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இம்மாநாட்டுக்கு வலுச்சேர்க்கும் வகையிலும், மாநாட்டிற்கான பொதுமக்கள், அரசியல் பிரதிநிதிகள், மதகுருமார்கள் மற்றும் சிவில் சமூகத்தினரின் ஆதரவைப் பெற்றுக்கொள்ளும் நோக்கிலும் மட்டக்களப்பு மாவட்டத்தில் நேற்று (14) பொதுக்கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றது.
மட்டக்களப்பு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் உறவுகளின் சங்கத்தின் ஏற்பாட்டில், அதன் தலைவி அ. அமலநாயகி தலைமையில் மட்டக்களப்பு அமெரிக்கன் மிஷன் மண்டபத்தில் இக்கலந்துரையாடல் இடம்பெற்றது.
கலந்துரையாடலின்போது எதிர்வரும் சர்வதேச மாநாடு தொடர்பான முக்கிய விடயங்கள் பகிரப்பட்டதுடன், மாநாட்டை மேலும் வலுப்படுத்துவதற்கான ஆலோசனைகளும் பெறப்பட்டன. மாநாட்டை வெற்றிகரமாக முன்னெடுத்துச் செல்வதற்கு அனைவரினதும் ஒத்துழைப்பும் ஆதரவும் கோரப்பட்டது.
சர்வதேச நீதியே எமது கோரிக்கை
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் இலங்கை அரசின் உள்ளகப் பொறிமுறைகளில் நம்பிக்கை இழந்துள்ள நிலையில், சர்வதேச நீதிப் பொறிமுறையின் அவசியத்தை சர்வதேச சமூகத்தின் கவனத்திற்கு கொண்டுசெல்வதே இம்மாநாட்டின் பிரதான நோக்கமாகும் என தெரிவித்தனர்.
விசாரணைக்காகவும், பாதுகாப்பாக அழைத்துச் செல்லப்படுவதாகவும் கூறி அரச அதிகாரிகளிடம் கையளிக்கப்பட்ட எமது உறவுகளுக்கு என்ன நடந்தது என்பது தொடர்பில் இலங்கை அரசு இதுவரை உரிய பொறுப்புக்கூறலை முன்னெடுக்கத் தவறியுள்ளது.

இதனாலேயே தாம் சர்வதேச நீதியை வலியுறுத்தி வருவதாக மட்டக்களப்பு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் உறவுகளின் சங்கத்தின் தலைவி தெரிவித்தார்.
மேலும், தமது உறவுகளைத் தேடி நீண்டகாலமாகப் போராடி வந்தவர்களில் 600க்கும் மேற்பட்டோர் இதுவரை உயிரிழந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
அவர்களின் போராட்டங்களும், சாட்சியங்களும் எதிர்கால சந்ததியினருக்கும் சர்வதேச சமூகத்திற்கும் சென்றடையும் வகையில், உயிரிழந்த உறவுகளின் சாட்சியங்களைப் பதிவு செய்து நூல் வடிவில் வெளியிடுவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அத்துடன், “அழிக்கப்பட்ட சாட்சியங்கள்” என்ற தலைப்பிலான நூல் ஒன்றையும், இதுவரை தமது போராட்டங்களின் ஊடாக முன்வைக்கப்பட்ட அறிக்கைகளைத் தொகுத்து மற்றுமொரு நூலாகவும் வெளியிடுவதற்கு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
பல்வேறு நிகழ்வுகளுடன் சர்வதேச மாநாடு
எதிர்வரும் சர்வதேச மாநாட்டில் பல்வேறு முக்கிய நிகழ்வுகளான சிறப்புரைகள், ஆவணங்கள் மற்றும் சாட்சியங்களை உள்ளடக்கிய கண்காட்சிகள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளுடன் பேரணிகளும் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் பல ஆண்டுகளாக எதிர்கொண்டுவரும் வலிகளையும், அவர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளையும் சர்வதேச சமூகத்திற்கு எடுத்துரைக்கும் முக்கிய தளமாக இம்மாநாடு அமைய வேண்டும் எனவும் கலந்துரையாடலில் வலியுறுத்தப்பட்டது.

இம்மாநாட்டில் அனைத்துச் சமூகங்களையும் சேர்ந்த பொதுமக்கள், அரசியல் பிரதிநிதிகள், மதகுருமார்கள், சிவில் சமூக அமைப்புகள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் பங்கேற்று வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்பங்களின் நீதிக்கான போராட்டத்திற்கு வலுச்சேர்க்குமாறு ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.
இந்தநிலையில் “நடைபெற்ற அநீதிக்கு சர்வதேச நீதி வேண்டும்” என்ற கோரிக்கையை வலுப்படுத்தும் வகையில், எதிர்வரும் ஓகஸ்ட் 30ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ள சர்வதேச மாநாட்டில் அனைவரும் ஆர்வத்துடன் கலந்துகொண்டு ஆதரவு வழங்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
இக்கூட்டத்தில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான இரா. சாணக்கியன், ஞா. சிறிநேசன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திரு. அரியநேத்திரன், மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் ஒன்றியத்தின் தலைவர் ச. சிவயோகநாதன், மதகுருமார்கள், அமெரிக்கன் மிஷன் அருட்தந்தை டேவிட், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள், ஊடகவியலாளர்கள் மற்றும் சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |