மன்னாரில் கைதான இந்திய கடற்தொழிலாளர்கள்: நீதிமன்றம் வழங்கிய உத்தரவு!
தலைமன்னார் கடற்பரப்பில் வைத்து 2 படகுகளுடன் கைது செய்யப்பட்ட 15 இந்திய கடற்தொழிலாளர்களையும் எதிர்வரும் 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மன்னார் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
இன்று (16) குறித்த இந்திய கடற்தொழிலாளர்களை மன்னார் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தியபோதே நீதவான் இந்த உத்தரவினைப் பிறப்பித்துள்ளார்.
இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட 15 இந்திய கடற்தொழிலாளர்கள் கடந்த சனிக்கிழமை (14) மாலை தலைமன்னார் கடற்பரப்பில் வைத்து கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மன்னார் நீதவான்
இராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சிமடம் பகுதியை சேர்ந்த கடற்தொழிலாளர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட 15 இந்திய கடற்தொழிலாளர்களும் தலைமன்னார் கடற்படை முகாமிற்கு கொண்டு வரப்பட்ட நிலையில் நேற்று (15) காலை மலேரியா பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு
பின்னர் கடற்படையின் ஆரம்பகட்ட விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டு கடற்தொழிலாளர்கள் அனைவரும் மன்னார் மாவட்ட கடற்தொழில் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

அங்கு கடற்தொழில் திணைக்கள அதிகாரிகளினால் பதிவுகள் மேற்கொள்ளப்பட்டதன் பின்னர் கைது செய்யப்பட்ட கடற்தொழிலாளர்கள் அனைவரும் மன்னார் காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
இந்த நிலையில் குறித்த 15 மீனவர்களும் இன்று (16) மாலை மன்னார் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது, விசாரணைகளை மேற்கொண்ட மன்னார் நீதவான் குறித்த கடற்தொழிலாளர்களை எதிர்வரும் 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளார்.