கொழும்பில் சீன நாட்டவர்களின் மோதல்! அம்பலமான கொலை - விசாரணையில் வெளியான பகீர் தகவல்கள்
கொழும்பு துறைமுக நகரத்தில் இரு சீனக் குழுக்களுக்கிடையே இடம்பெற்ற வன்முறை மோதல் சம்பவம் தொடர்பாக கொழும்பு துறைமுக காவல்துறையினரும் எஹெலியகொட காவல்துறையினரும் இணைந்து தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அந்த வகையில், குறித்த மோதல் சம்பவம் தொடர்பில் பல்வேறு உண்மைகள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.
காவல்துறையினரின் தகவலின்படி, மூன்று சீனக் குடிமக்கள் இரவு சுமார் 11 மணியளவில் வாடகைக் கார் ஒன்றில் வந்து கொழும்பு துறைமுக நகரத்தில் உள்ள தொங்கு பாலத்தில் மீன்பிடித்துக் கொண்டிருந்துள்ளனர்.
கடத்தல் சம்பவம்
அதன்போது, அதிகாலை 2 மணிக்கும் 3 மணிக்கும் இடைப்பட்ட நேரத்தில், சுமார் 20 சீன நாட்டினர் ஒரு கருப்பு வானில் வந்து இறங்கி, அங்கு இருந்த மூன்று பேரையும் தாக்கி, அவர்களின் கைகளையும் கால்களையும் கட்டி, கண்களைக் கட்டி, இரண்டு கைத்துப்பாக்கிகளைக் காட்டி மிரட்டியதாகக் கூறப்படுகிறது.

பாதிக்கப்பட்டவர்களில் இருவர் வானுக்குள் கட்டப்பட்ட நிலையில் விடப்பட்டதாகவும், ஹாவோ சோங் என அடையாளம் காணப்பட்ட மூன்றாவது நபர் மற்றொரு வாகனத்தில் கடத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
பின்னர், பாதிக்கப்பட்ட இருவரும் தங்களைத் தாங்களே விடுவித்துக் கொண்டு, தங்கள் நண்பர்களுக்குத் தகவல் தெரிவித்து. அவர்கள் இந்தச் சம்பவத்தை கொழும்பு துறைமுகக் காவல்துறையினருக்கு கூறியுள்ளனர்.
இவ்வாறானதொரு பின்னணியில், நேற்று மாலை, எஹெலியகொட, கரதானாவில் உள்ள ஒரு வனப்பகுதியில் சீன நாட்டவர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டது.
கொலை
பாதிக்கப்பட்டவரின் கைகளும் கால்களும் கட்டப்பட்டிருந்ததாகவும், அவரது கண்கள் கட்டப்பட்டிருந்ததாகவும், அவர் பலத்த காயங்களுடன் இருந்ததாகவும், அவரது உடல் கற்களால் மூடப்பட்டிருந்ததாகவும் காவல்துறை தெரிவித்தது.

இந்த நிலையில், தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் காயமடைந்த இரண்டு சீன நாட்டினரும், சடலமாக மீட்கப்பட்டவர் ஹாவோ சோங் என அடையாளம் காட்டியுள்ளனர்.
இதன்படி, அவரைக் கடத்துவதற்குப் பயன்படுத்தப்பட்டதாக நம்பப்படும் ஒரு வாகனத்தையும் புலனாய்வாளர்கள் மீட்டுள்ளனர்.
ஆயுதங்கள் மீட்பு
இதேவேளை, பாதிக்கப்பட்ட இருவரும் கைவிடப்பட்டதாகக் கூறப்படும் வானுக்குள், காவல்துயைினர் ஒரு க்ளாக் 44 அரை-தானியங்கி கைத்துப்பாக்கி, தோட்டாக்கள் மற்றும் ஒரு VVK வாக்கி-டாக்கி ஆகியவற்றை மீட்டுள்ளனர்.

மேலும், அந்த வான் அம்பலந்தொட்டாவைச் சேர்ந்த ஒரு தனிநபரின் பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும், வாடகைக்கு எடுக்கப்பட்ட வாடகைக் கார் கொழும்பு 5-ஐத் தளமாகக் கொண்ட ஒரு நிறுவனத்திற்குச் சொந்தமானது என்றும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையில், இந்தச் சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் இரண்டு சீன நாட்டினர், கட்டுநாயக்கவில் உள்ள பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம் வழியாக நாட்டை விட்டு வெளியேற முயன்றபோது கைது செய்யப்பட்டுள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |