பொன் சிவகுமாரனின் 52 ஆவது நினைவேந்தலுக்கு உத்தியோகபூர்வமாக அழைப்பு
விடுதலைப் போராட்டத்தின் முதல் வித்து பொன் சிவகுமாரன் அவர்களின் 52 ஆவது நினைவேந்தல் நிகழ்வுகள் எதிர்வரும் 05 ஆம் திகதி வெள்ளிக்கிழழை காலை 8 மணிக்கு வலிகாமம் கிழக்கு பிரதேச சபையினால் உத்தியோகபூர்வமாக அனுஸ்டிக்கப்படவுள்ளதாக வலிகாமம் கிழக்கு பிரதேச சபை அறிவித்துள்ளது.
உரும்பிராய் சந்தியில் உள்ள சிவகுமாரனின் நினைவிடத்தில் ஈகைச்சுடரேற்றி அனுஸ்டிக்கப்படவுள்ளது. அதற்கான ஏற்பாடுகள் ஏற்கனவே வலிகாமம் கிழக்கு பிரதேச சபையினால் மேற்கொள்ளப்பட்டுள்ளன
தன்னுயிரை இனத்திற்காக தியாகம் செய்தார்.
தமிழ் மக்களுக்கெதிராக மேற்கொள்ளப்பட்ட இன ஒடுக்குமுறைக்கு எதிராக தன்னை முழுமையாக அர்ப்பணித்து போராடிய நிலையில் 1974 ஆம் ஆண்டு யூலை 5 ஆம் திகதி அவர் கைது செய்யப்பட்ட சமயத்தில் நஞ்சருந்தி தன்னுயிரை பொன் சிவகுமாரன் ஆகுதியாக்கினார்.

தமிழ் மாணவர்களுக்கு பல்கலைக்கழக அனுமதிக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட தரப்படுத்தலுக்கு எதிராக தமிழ் மாணவர் பேரவையில் தன்னை முழுமையாக இணைத்துப் போராடிய பொன் சிவகுமாரன் உலகத்தமிழாராட்சி மாநாட்டு படுகொலை உள்ளிட்ட தமிழ் மக்களுக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பட்ட ஆயுதவழியிலான வன்முறைகளையும் அடக்கு முறைகளையும் எதிர்த்து இளைஞனாக தன்னுயிரை இனத்திற்காக தியாகம் செய்தார்.
நினைவேந்தலில் பங்கேற்க சகலரும் அழைக்கப்படுகின்றனர்
இவ்வாறாக இனத்தின் அடையாளமாக தமிழ் மக்களுக்கு எதிரான ஆயுதவழியிலான அடக்கு முறைகளுக்கு எதிராக துணிந்து போராடிய பொன் சிவகுமார் அவர்களது தியாகத்தினை நிலைநிறுத்தி வலிகாமம் கிழக்கு பிரதேச சபை இவ் நினைவேந்தலை வழமையாக உத்தியோகபூர்வமாக அனுஸ்டித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. இவ் நினைவேந்தலில் பங்கேற்பதற்காக சகலரும் அழைக்கப்படுகின்றனர்.

| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |