வீழ்த்தப்படும் தலைகள் - IRGC உளவுத்துறைத் தலைவர் பலி - உறுதி செய்த ஈரான்
புதிய இணைப்பு
ஈரானின் புரட்சிகர காவல்படையின் (IRGC) உளவுத்துறை அமைப்பின் தலைவரான மஜித் காதேமி (Majid Khademi) கொல்லப்பட்டதற்கு இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் மற்றும் இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் (IDF) அதிகாரப்பூர்வமாகப் பொறுப்பேற்றுள்ளன.
இன்று (6.4.2026) அதிகாலையில் தெஹ்ரானில் அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய படைகள் நடத்திய கூட்டு வான்வழித் தாக்குதலில் அவர் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
இது குறித்து இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் (IDF) டெலிகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், காதேமியின் மரணம் ஈரானிய புரட்சிகர காவல்படைக்குக் கிடைத்துள்ள "மற்றொரு பலத்த அடி" என்று வர்ணித்துள்ளது.
வழக்கமாக ஈரானியத் தளபதிகள் கொல்லப்படும்போது, இஸ்ரேல் அல்லது அமெரிக்கா அறிவித்த பின்னரே ஈரான் அதனை உறுதிப்படுத்தும்.
ஆனால், இம்முறை இஸ்ரேல் உரிமை கோருவதற்கு முன்னதாகவே ஈரான் இந்தத் தகவலை அறிவித்தது ஒரு குறிப்பிடத்தக்க மாற்றமாகக் கருதப்படுகிறது.
முதலாம் இணைப்பு
ஈரான் புரட்சிகர பாதுகாப்புப் படையின் உளவுத்துறை தலைவர் மேஜர் ஜெனரல் மஜித் காதேமி கொல்லப்பட்டுள்ளார்.
மஜித் காதேமி கொல்லப்பட்டதாக ஈரானிய அரசு ஊடகங்கள் திங்களன்று உறுதிப்படுத்தியதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன
இஸ்ரேல், அமெரிக்க கூட்டுத் தாக்குதலிலேயே அவர் கொல்லப்பட்டதாக ஈரான் பாதுகாப்பு படை குற்றஞ் சுமத்தியுள்ளது.
வான்வழித் தாக்குதல்கள்
அவர் எங்கு கொல்லப்பட்டார் என்பது தொடர்பான விபரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.

ஈரான் தலைநகர் தெஹ்ரானைச் சுற்றியுள்ள குடியிருப்புப் பகுதிகளை இலக்கு வைத்து இன்று அதிகாலை வான்வழித் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளது.
இந்த தாக்குதலில் 13 பேர் பலியாகியுள்ளதாக வெளிநாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன. தெஹ்ரானில் உள்ள ஷரீஃப் பல்கலைக்கழகத்தை குறிவைத்தும் வான்வழி தாக்குதல் நடைபெற்றுள்ளது.
வான்வழி தாக்குதலால், குடியிருப்பு கட்டடம் சேதம் அடைந்துள்ளதோடு, இயற்கை எரிவாயு விநியோகமும் பாதிக்கப்பட்டுள்ளதாக ஈரான் கூறியுள்ளது.