ஹோர்முஸ் நீரிணையில் கட்டணம் வசூலிக்க தீர்மானித்துள்ள ஈரான்!
மத்திய கிழக்கில் போர் தொடரும் நிலையில் ஹோர்முஸ் நீரிணை வழியாகப் பயணிக்கும் கப்பல்களிடம் கட்டணம் வசூலிப்பதற்கான சட்டங்களை இயற்ற ஈரான் நாடாளுமன்றம் நடவடிக்கை எடுத்து வருவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதற்கான சட்டமூலம் ஏற்கனவே தயாரிக்கப்பட்டுள்ளதுடன், விரைவில் சட்டத்துறையினால் அது இறுதி செய்யப்படும் என ஈரான் நாடாளுமன்றத்தின் சிவில் விவகாரக் குழுவின் தலைவரை மேற்கோள் காட்டி செய்திகள் வெளியாகியுள்ளன.
இந்தத் திட்டத்தின்படி, ஹோர்முஸ் நீரிணை வழியாகச் செல்லும் கப்பல்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக ஈரான் கட்டணம் வசூலிக்க வேண்டும் என்று அந்த அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.
வரி செலுத்தப்படுதல்
இது ஒரு சாதாரண நடைமுறை என்று மேலும் தெரிவித்துள்ள அவர், ஏனைய போக்குவரத்து வழிகளைப் போலவே, ஒரு நாட்டின் ஊடாகப் பொருட்கள் கொண்டு செல்லப்படும்போது வரி செலுத்தப்படுகிறது என சுட்டிக்காட்டியுள்ளார்.

ஹோர்முஸ் நீரிணையும் அத்தகைய ஒரு வழிப்பாதையே. அதன் பாதுகாப்பை நாங்கள் உறுதிப்படுத்துவதால், கப்பல்களும் எண்ணெய் தாங்கிகளும் அதற்குக் கட்டணம் செலுத்துவது இயல்பானது என்று கூறியுள்ளார்.
தற்போதைய போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக ஈரான் முன்வைத்துள்ள ஐந்து நிபந்தனைகளில் ஒன்று, ஹோர்முஸ் நீரிணை மீது தனது அதிகாரத்தைச் செலுத்துவதற்கான உரிமையை சர்வதேச சமூகம் அங்கீகரிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.
you may like this
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |