இஸ்ரேல் - அமெரிக்காவிற்கு எதிராக 70ஆவது தாக்குல் அலையை ஆரம்பித்துள்ள ஈரான்
கடந்த சில மணித்தியாலங்களாக ஈரானின் தலைநகர் தெஹ்ரான் மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகளில் இஸ்ரேல் மற்றும் அமெரிக்கப் போர் வானூர்திகள் கடுமையான வான்வழித் தாக்குதல்களை மேற்கொண்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தநிலையில் குறித்த தாக்குதல்களுக்கு இணையாக, இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவிற்கு எதிராகத் தங்களது 70ஆவது கட்டத் தாக்குதல் அலைகளை ஆரம்பித்துள்ளதாக ஈரானிய ஆயுதப் படைகள் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளன.
ஈரான் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, வளைகுடாப் பிராந்தியத்தில் உள்ள அமெரிக்க இராணுவத் தளங்கள் மற்றும் இஸ்ரேலை இலக்கு வைத்துப் பெருமளவிலான ஏவுகணைகள் மற்று ஆளில்லா வானூர்தி தாக்குதல்கள் நடத்தப்படும்.
பாரிய வெடிப்புச் சத்தங்கள்
மேலும், குறிப்பிட்ட சில பகுதிகளை நோக்கி ரொக்கெட் தாக்குதல்களும் நடத்தப்பட்டு வருவதாக ஈரான் இராணுவம் குறிப்பிட்டுள்ளது.
அத்துடன் தெஹ்ரானில் உள்ள ஷாரக்-இ-மஹல்லாதி, ஷாரக்-இ-பர்திஸ் மற்றும் கராஜ் ஆகிய பகுதிகளே அமெரிக்க - இஸ்ரேல் தாக்குதல்களுக்கு இலக்காகியுள்ளதுடன், தெஹ்ரானுக்கு தெற்கே உள்ள ஷாரக்-இ-ரே பகுதியிலும் பாரிய வெடிப்புச் சத்தங்கள் கேட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இவை தவிர, தப்ரிஸ் மற்றும் இஸ்ஃபஹான் ஆகிய நகரங்களிலும் அமெரிக்க - இஸ்ரேலின் வான்வழித் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் உறுதிப்படுத்துகின்றன.
தற்போதைய நிலவரப்படி, தெஹ்ரான் நகரைச் சூழவுள்ள மாகாணங்களில் மோதல் தீவிரமடைந்துள்ளதோடு, இருதரப்புக்கும் இடையிலான ஏவுகணைப் பரிமாற்றங்கள் காரணமாகப் பிராந்தியத்தில் பதற்றமான சூழல் நிலவுகின்றமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |