ஈரான் - இஸ்ரேல் மோதல் தீவிரம்: உயரதிகாரிகள் தொடர் பலி
ஈரான் (Iran) மீது இஸ்ரேல் (Israel) நடத்திய தாக்குதலில் மேலும் எட்டு ஈரான் தளபதிகள் கொல்லப்பட்டுள்ளனர்.
குறித்த விடயத்தை ஈரானின் இஸ்லாமிய புரட்சிக் காவல் படை அறிவித்துள்ளது.
இது குறித்து காவல் படை வெளியிட்டுள்ள அறிக்கையில், இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஈரான் இராணுவத்தை வழிநடத்திய மூத்த இராணுவ தளபதிகள் எட்டு பேர் கொல்லப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இஸ்ரேல் தாக்குதல்
அவர்களின் தியாகத்திற்கு ஆழ்ந்த இரங்களைத் தெரிவித்துக்கொள்கிறோம் எனவும் ஈரான் தரப்பில் கவலை வெளியிடப்பட்டுள்ளது.
இந்தநிலையில், தாக்குதலில் மஹ்மூத் பகேரி, தாவூத் ஷேகியான், முஹம்மது பாகெர் தாஹெர்பூர், மன்சூர் சஃபர்பூர், மசூத் டயூப், கொஸ்ரோ ஹஸ்ஸானி, ஜாவத் ஜோர்சாரா மற்றும் முஹம்மது அகஜாஃபரி ஆகியோர் உயிரிழந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
ஈரானின் நகரங்கள், அணு சக்தி நிலையங்கள் மற்றும் ஈரானின் உயர்மட்ட இராணுவ தளபதிகள், அணுசக்தி விஞ்ஞானிகள் மற்றும் பொதுமக்களைக் குறிவைத்து கடந்த வெள்ளிக்கிழமை முதல் இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகின்றது.
ஈரான் ஏவுகணை
இதனைத் தொடர்ந்து சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமையும் வெவ்வேறு பகுதிகளில் இஸ்ரேல் தாக்குதலைத் தொடர்ந்து வருகின்றது.
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணைகளை வீசித் தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றது.
இஸ்ரேலின் குடியிருப்புப் பகுதிகளை நோக்கி வீசப்பட்ட ஏவுகணை தாக்கியதில் பெண் உள்பட 13 பேர் கொல்லப்பட்டுள்ளதாக இஸ்ரேல் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில், பலர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் நான்கு பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
