உலக எண்ணெய் சந்தை பதற்றத்தில்: ஈரானின் அதிரடி தீர்மானம்
உலக எண்ணெய் சந்தையை அதிரவைக்கும் வகையில் ஹோர்முஸ் நீரிணையை மூட ஈரான் (Iran) தீர்மானித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஈரான் நாடாளுமன்றம், உலகத்தின் முக்கிய எண்ணெய் போக்குவரத்து பாதையான ஹோர்முஸ் நீரிணையை (Strait Of Hormuz) மூட அனுமதி அளித்துள்ளதால் மத்திய கிழக்கின் நிலவரம் மேலும் தீவிரமடைந்துள்ளது.
இந்த தீர்மானம், அமெரிக்கா ஈரானின் போர்டோ (Fordow), இஸ்ஃபஹான் (Isfahan), மற்றும் நடான்ஸ் (Natanz) அணு நிலையங்களை தாக்கிய பின்னர் வந்துள்ளது.
இடையே பதற்றம்
ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே உள்ள பதற்றம், இப்போது உலக எண்ணெய் சந்தையையும் தாக்கக்கூடிய நிலையில் உள்ளது.
ஹோர்முஸ் நீரிணை, ஈரானுக்கும் ஓமனுக்கும் இடையே உள்ள ஒரு கப்பல் வழித்தடம், இது பாரசீக வளைகுடாவையும் அரபிக் கடலையும் இணைக்கிறது.
இந்த நீரிணையின் குறுகிய இடத்தில் உள்ள அகலம் 33 கிலோமீட்டர் மட்டுமே அதில் போக்குவரத்துக்கு ஒரு திசையில் மூன்று கிலோமீற்றர் மட்டுமே உள்ளது.
சவுதி அரேபியா, ஈராக், குவைத்த், ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஈரான் போன்ற பாரிய எண்ணெய் உற்பத்தியாளர்கள் இந்த வழியாக எண்ணெய் ஏற்றுமதி செய்கிறார்கள்.
எண்ணெய் விலைகள்
அத்தோடு, உலகின் முக்கிய LNG ஏற்றுமதி நாடான கத்தார், முழுமையாக இந்த நீரிணையையே சார்ந்துள்ளது.
நாளொன்றுக்கு 17.8 முதல் 20.8 மில்லியன் பீப்பாய் கச்சா எண்ணெய் மற்றும் அதனுடைய உற்பத்திகள் இந்த வழியாகவே பயணம் செய்கின்றன.
எனவே, இந்த நீரிணை மூடப்பட்டால், உலக எண்ணெய் விலைகள் கூடிய வேகத்தில் உயரக்கூடும்.
ஈரான், இந்த நீரிணையின் வடபகுதியை ஒட்டியுள்ளதால், எப்போதும் இதனை அரசியல் அழுத்தக் கருவியாக பயன்படுத்தியுள்ளது.
கடந்த காலங்கள்
கடந்த காலங்களில் பலமுறை ஹோர்முஸ் மூடப்போவதாக மிரட்டியுள்ளாலும் முழுமையாக செயல்படுத்தவில்லை.
இந்த தடுப்பு காரணமாக, மும்பை பங்கு சந்தை, நியூயார்க் எண்ணெய் மார்க்கெட் போன்றவை பதற்றமடையலாம்.
இந்தியா, ஹோர்முஸ் வழியாக நாளொன்றுக்கு இரண்டு மில்லியன் எண்ணெய் பீப்பாய்கள் இறக்குமதி செய்கின்றது.
ஆனால், ரஷ்யா, அமெரிக்கா, பிரேசில் போன்ற மாற்று நாடுகள் மூலம் இந்தியா தன்னுடைய ஆதாரங்களை விரிவுபடுத்தி விட்டதால் உடனடி பாதிப்பு குறைவாகவே இருக்கும் என தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
