ஈரானில் உச்சக்கட்ட படபடப்பு...! அணுமின் நிலையங்களைச் சுற்றி மனிதச் சங்கிலி - எட்டு மணி வரை ட்ரம்பின் கெடு
ஈரானுக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கிழக்கு நேரப்படி இன்றிரவு எட்டு மணி வரை விதித்த காலக்கெடு, அதன் பின்னர் அப்போகலிப்ஸ் (Apocalypse) அச்சத்தை உருவாக்க முதலையும் மூர்க்கனும் கொண்டது விடேல் என்ற தமிழ் உதாரணத்தைத் தெஹ்ரான் அறியாமல் போனாலும் அதற்கும் படபடப்பு வந்திருப்பதை இன்று அதிகாலை முதல் ஈரானிய அரசுத் தொலைக்காட்சியில் வெளியிடப்படும் அவசர அறிவிப்புகள் புலப்படுத்தின.
நாட்டில் உள்ள அணுமின் நிலையங்களைச் சுற்றி மனிதச் சங்கிலிகளை அமைக்குமாறு மக்களிடம் கோரிய ஆட்சித்தரப்பு, மறுபுறத்தே அமெரிக்காவும் இஸ்ரேலும் தனது நாட்டில் ஒரு தரைவழிப் படையெடுப்பை நடத்தினால் அதற்கு எதிராகப் போரிட ஒரு கோடியே 40 இலட்சம் மக்கள் தயார் எனச் சூளுரைக்கிறது.
கடந்த வாரம் ஈரானிய நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் காலிபாஃப் இதே தொகையை 70 இலட்சம் பேர் எனச் சொல்லிய நிலையில் அதற்கிடையில் இந்தத் தொகை இரட்டிப்பாக்கப்படுவதும் ஈரானின் துணை இராணுவப் படையான பசிஜ் படை, 12 வயதான சிறார்களும் தங்கள் படையில் இணைய அனுமதிப்பதும் அமெரிக்காவை அச்சப்படுத்த ஈரான் வெளிப்படுத்தும் ஒரு தந்திரமாகவும் தெரிகிறது.
ஒருகாலத்தில் தமிழ்த்தாயகத்தின் போராளிகள் சிறாரைத் தமது படையணிகளில் இணைப்பதாக அனைத்துலக அரங்கில் கூவிய சிறிலங்காவுக்கு அதே அரங்கங்களில் பக்கப்பாட்டுப் பாடிய அதே ஈரான், இன்று 12 வயதான சிறுவர்களையும் ஆள்சேர்ப்பு செய்கிறது.
இதற்கும் அப்பால் ஈரானிய அன்னையரே தந்தையரே உங்கள் பிள்ளைகளின் கைகளைப் பிடித்துக்கொண்டு வீதிகளுக்குச் சென்று உங்கள் பிள்ளைகளைப் பாதுகாப்புப் பணியில் ஈடுபட அனுப்புங்கள் என இன்று ஈரானிய இராணுவத்தால் அரசுத் தொலைக்காட்சியில் கோரப்பட்டது.
கடந்த ஜனவரியில் நாடு தழுவிய அரசு எதிர்ப்புப் போராட்டங்களின் போது தங்கள் பிள்ளைகளை வீட்டிலேயே வைத்திருக்குமாறும் இல்லையெனில் அவர்கள் சுட்டுக்கொல்லப்படுவார்கள் என எச்சரித்த அதே ஈரானிய இராணுவம், இன்று ஈரானிய அன்னையரே தந்தையரே எங்களுடன் உங்கள் பிள்ளைகளை இணைத்துவிடுங்கள் என்கிறது.
எல்லாம் ட்ரம்பின் இன்றைய எட்டு மணி எச்சரிக்கையின் பின்னணியில் வரும் நிலையில் இலங்கையில் கடந்த மார்ச் 18 புதன் முதல் அநுர அரசாங்கம் நடைமுறைப்படுத்திய அரசுத் துறைக்குரிய புதன்கிழமை சிறப்பு விடுமுறைத் திட்டம், வந்த வேகத்தில் ஒரு மாதத்தைக் கூடக் கடக்காத நிலையில் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க இன்று நாடாளுமன்றத்தில் சில நிவாரணத் துண்டுகளை நீட்டிய பின்னணியில் முடிவுக்கு வந்த நிலையில் இந்த விடயங்களை மையப்படுத்தி வருகிறது ஐபிசி தமிழின் இன்றைய செய்திவீச்சு...
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |