இலங்கை நிலக்கரி கொள்வனவில் பாரிய முறைகேடு...!
நுரைச்சோலை லக்விஜய மின்னுற்பத்தி நிலையத்திற்காக நிலக்கரி கொள்வனவு செய்யப்பட்ட நடவடிக்கைகளில் இடம்பெற்ற பாரிய நிதி மற்றும் நிர்வாக முறைகேடுகளைக் கணக்காய்வாளர் நாயகத்தின் புதிய கணக்காய்வு அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது.
நிலக்கரியின் தரத்தைப் பரிசோதிக்க விற்பனையாளரால் நியமிக்கப்பட்ட தென்னாப்பிரிக்க நிறுவனத்திற்கு உரிய அங்கீகாரம் இருக்கவில்லை.
இதனால், 2025 டிசம்பரில் அனுமதிப்பத்திரம் இரத்து செய்யப்பட்ட இந்தோனேசிய நிறுவனமொன்றின் ஊடாக 12 கப்பல் தொகுதிகளுக்கான தர அறிக்கைகள் பெறப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
தரக்குறைவான நிலக்கரி
ஒப்பந்தத்தைப் பெற்றுக்கொண்ட ட்ரைடென்ட் நிறுவனம், விலைமனு கோரப்பட்ட திகதி வரை தனது நிறுவனப் பதிவைக்கூடப் பூர்த்தி செய்திருக்கவில்லை என்பது கணக்காய்வில் தெரியவந்துள்ளது.
ஏற்றுமதி துறைமுக அறிக்கைகளின் உண்மைத்தன்மையை உறுதிப்படுத்தப் பல மாற்று வழிகள் இருந்தும் இலங்கை நிலக்கரி நிறுவனம் அதனைப் பயன்படுத்தத் தவறியுள்ளது.

இந்தநிலையில், 2025 நவம்பர் முதல் டிசம்பர் வரையிலான 40 நாட்களில் நிலக்கரி கப்பல்களைக் கொண்டுவரத் தவறியதால் கடந்த மார்ச் மாதம் அவசர கொள்முதல் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
அவசர கொள்முதலுக்காகத் தெரிவு செய்யப்பட்ட Tarandot Resource எனும் தனியார் நிறுவனம், ஏற்கனவே தரக்குறைவான நிலக்கரியை வழங்கியதற்காக நிராகரிக்கப்பட்ட ஒரு நிறுவனமாகும் என்பதும் அம்பலமாகியுள்ளது.
முறையான திட்டமிடல் இன்மை மற்றும் தகுதியற்ற நிறுவனங்களுக்கு ஒப்பந்தங்களை வழங்கியதன் மூலம் மின்னுற்பத்தித் துறைக்குப் பாரிய நெருக்கடிகள் ஏற்பட்டுள்ளதாகக் கணக்காய்வாளர் நாயகம் தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |