மன்னாரில் டித்வா பேரிடரால் குவிக்கப்பட்ட மணலை அகற்றும் திட்டத்தில் முறைகேடு
மன்னார் மாவட்டத்தில் கடந்த மார்ச் மாதம் வழங்கப்பட்ட மணல் அகழ்வுக்கான அனுமதிப்பத்திரங்களை உடனடியாகத் தற்காலிகமாக இடை நிறுத்துவதற்கும், அந்தப் பத்திரங்கள் வழங்கப்பட்டமை தொடர்பில் முன்வைக்கப்படும் மிகப்பெரிய முறைகேடுகள் குறித்து குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (C.I.D.) விசாரணைகளுக்கு பாரப்படுத்துவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார்.
மன்னார் மாவட்டத்தில் மணல் விநியோகத்தை ஒழுங்குபடுத்துவது தொடர்பான மாவட்ட மட்டத்திலான விசேட கூட்டம், மாவட்டச் செயலாளர் க.கனகேஸ்வரன் தலைமையில் இன்று (18) சனிக்கிழமை காலை மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இக்கலந்துரையாடலில் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன், கூட்டுறவுத்துறை பிரதி அமைச்சரும் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருமான உபாலி சமரசிங்க, நாடாளுமன்ற உறுப்பினர் ம.ஜெகதீஸ்வரன், வன்னிப்பிராந்திய பிரதிப் காவல்துறைமா அதிபர் உள்ளிட்ட அரச உயர் அதிகாரிகள் பலரும் பங்கேற்றனர்.
முறையான ஒருங்கிணைப்பு இல்லாமை
மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் ஏற்பாட்டில் குறித்த கூட்டம் இடம் பெற்றது.

மன்னார் மாவட்டத்தில் மணல் அகழ்வு மற்றும் விநியோகம் ஆகியவற்றுடன் தொடர்புடைய அரச திணைக்களங்களுக்கு இடையில் முறையான ஒருங்கிணைப்பு இல்லாமையே பெரும் பிரச்சினையாக உருவெடுத்துள்ளது.
வழங்கப்பட்ட சில அனுமதிப்பத்திரங்கள் தொடர்பிலும் சந்தேகங்கள் நிலவுகின்றன. மணல் அகழ்வு செய்யப்பட்ட இடங்கள் மிக மோசமான சுற்றாடல் பாதிப்பை எதிர்நோக்கியுள்ளன.
இவற்றுக்கு முற்றுப்புள்ளி வைப்பதாக அமைய வேண்டும் என அரசாங்க அதிபர் தெரிவித்தார்.
தொடர்ந்து உரையாற்றிய ஆளுநர் அவர்கள்,
“நான் மாவட்டச் செயலாளராகப் பணியாற்றிய காலத்திலிருந்தே மணல் உள்ளிட்ட கனிய வளங்களின் அகழ்வு மற்றும் விநியோகத்தை ஒழுங்குபடுத்துவதற்கு மாவட்ட மட்டத்திலான குழுவொன்று அவசியம் என்பதை தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்துள்ளேன்.
மணல் விநியோகம்
ஆனால், அப்போதிருந்த சில அரசியல்வாதிகளின் பின்புலத்துடன் இயங்கிய சில அரச நிறுவனங்கள் இதற்கு ஒத்துழைக்க மறுத்தன.

நான் ஆளுநராக பதவியேற்றது முதல் மணல் விநியோகம் தொடர்பான விடயங்களை மிக நுணுக்கமாக அவதானித்து வருகின்றேன். ஈவு இரக்கமற்ற விதத்தில் இங்கு மணல் மாபியாக்கள் செயற்பட்டு வருகின்றனர்.
ஒரு சில குழுக்களே மணலுக்கான விலையைத் தீர்மானிக்கின்றன. இவர்களுக்குச் சில அதிகாரிகளும் முழுமையான ஒத்துழைப்பு வழங்குகின்றனர்.
அரசாங்கக் காணிகளில் அகழப்படும் மணலை மக்களுக்கு நியாயமான விலையில் வழங்கினாலும் பரவாயில்லை.ஆனால் இவர்கள் ஒரு டிப்பர் மணல் விற்பனையில் சுமார் ஒரு லட்சம் ரூபாய் வரை லாபம் உழைக்கின்றனர்.
குறிப்பிட்ட ஒரே குழுவினரே அகழ்வு மற்றும் விநியோகத்துக்கான அனுமதிப்பத்திரங்களை ஏகபோகமாகப் பெற்றுக்கொள்கின்றனர்.
மோசமான செயற்பாடு
அவர்களுக்கு வழங்குவதற்கே சில அதிகாரிகளும் விரும்புகின்றனர். இந்த மோசமான செயற்பாட்டால் அரசாங்கத்துக்குப் நிதியிழப்பு ஏற்படுகிறது.
மக்களுக்கு நியாயமான விலையில் மணல் கிடைக்க வேண்டும் என்ற உயரிய நோக்கில் தான் புவிச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்கப் பணியகத்தின் தலைவரை அழைத்து விசேட கலந்துரையாடல் ஒன்றை நடத்தியிருந்தேன்.
அந்தக் கூட்டத்தின் தீர்மானங்களுக்கு அமைவாகவே இன்று இந்த மாவட்ட மட்டக் கூட்டம் நடத்தப்படுகிறது.
மணல் விநியோகம் மற்றும் மணல் விலை ஆகியவற்றை மாவட்டச் செயலாளர் தலைமையிலான இந்தக் கூட்டத்திலேயே தீர்மானிக்க வேண்டும் என ஆளுநர் செயலகத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்தை நடைமுறைப்படுத்த அனைத்து திணைக்களங்களும் நிபந்தனையின்றி ஒத்துழைக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |