அடுத்த கட்டத்தில் யோஷித மீதான ஊழல் வழக்கு! முன்னாள் காதலியின் முழுமையான வாக்குமூலம்!
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மகன் யோஷித ராஜபக்சவுக்கு எதிராக பணச்சலவைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கின் விசாரணையில், சி.எஸ்.என். (CSN) தொலைக்காட்சியின் முன்னாள் தலைமை அதிகாரி யசாரா அபேநாயக்க முக்கிய சாட்சியமாக மாறியுள்ளார்.
பணச்சலவை குற்றச்சாட்டு யோஷித மீது ரூ.7 கோடியே 30 லட்சத்திற்கும் அதிக மதிப்புள்ள ஐந்து காணித் துண்டுகளை சட்டவிரோதமாக பெற்றுக்கொண்டதன் மூலம் பணச்சலவைத் தடுப்புச் சட்டத்தை மீறியதாக சட்டமா அதிபர் வழக்கு தொடர்ந்துள்ளார்.
இந்த வழக்கில் கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி உதேஷ் ரணதுங்க முன்னிலையில் சாட்சியம் அளித்த யசாரா அபேநாயக்க, தாம் மற்றும் யோஷித இடையே 2009 முதல் 2013 வரை சுமார் நான்கு ஆண்டுகள் காதல் உறவு இருந்ததாக தெரிவித்துள்ளார்.
டெய்ஸி ஃபாரெஸ்டின் கல்கிஸ்ஸை வீடு
அவர் மேலும் கூறியதாவது, “நாங்கள் திருமணம் செய்து கொள்ளத் திட்டமிட்டிருந்தோம். திருமணத்திற்குப் பிறகு யோஷிதவின் பாட்டி டெய்ஸி ஃபாரெஸ்டுக்கு சொந்தமான கல்கிஸ்ஸை மிஹிந்து மாவத்தையில் உள்ள வீட்டில் குடியேற திட்டமிட்டோம்.

அதற்காக அந்த வீட்டின் உள் அலங்காரப் பணிகளை மேற்கொள்வதற்காக ஒரு வடிவமைப்பாளருடன் கலந்துரையாடினோம்.
ஆனால், இருவரின் ஜாதகங்கள் பொருந்தவில்லை என்ற காரணத்தால் 2013 ஆம் ஆண்டு அந்த காதல் உறவு முடிவுக்கு வந்தது.
முதலில் ஐ.டி.என். (ITN) தொலைக்காட்சியில் பணியாற்றினேன். பின்னர் சி.எஸ்.என். தொலைக்காட்சியின் தலைவராக சேர்ந்தேன்.
மேலும், நான் CSN-இல் பணிபுரிந்த காலத்தில் யோஷித அங்கு பணியாற்றவில்லை. ஆனால் எனது பணிகளுக்கு அவர் உதவி செய்து வந்தார்.
காதல் உறவு நீடித்த காலத்தில் யோஷிதவுடன் சேர்ந்து அவரது பாட்டி டெய்ஸி ஃபாரெஸ்டின் கல்கிஸ்ஸை வீட்டைப் பார்வையிட்டோம், திருமணத்திற்குப் பிறகு அங்கே வசிப்பதற்காக வீட்டை புதுப்பிக்கும் பணிகள் குறித்து ஆலோசனை நடத்தினோம்” என கூறியுள்ளார்.
சாட்சியம் வழங்கிய லுஷான் ரத்நாயக்க
இதன்படி இந்த வழக்கில் மற்றொரு சாட்சியம் வழங்கிய லுஷான் ரத்நாயக்க, கல்கிஸ்ஸை சிறிமல் உயன பகுதியில் இருந்த தனது காணியை ரூ.3 கோடியே 45 லட்சத்து 40 ஆயிரத்திற்கு டெய்ஸி ஃபாரெஸ்ட் பெயரில் விற்றதாக தெரிவித்துள்ளார்.

அவர் கூறியதாவது, “தனது மனைவி உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டதால் அந்த வீட்டை விற்க முடிவு செய்தோம். அந்த வீட்டை விற்று ரோயல் பார்க் பகுதியில் உள்ள ஒரு அனெக்ஸுக்கு செல்ல திட்டமிட்டோம்.
நண்பரான வசந்த ஜயசூரியவிடம் வீடு விற்பனைக்கு இருப்பதாக தெரிவித்தேன். பின்னர் அவர் ஒரு வாங்குபவரை அழைத்து வந்தார்.
ஆனால் வாங்குபவர் யார் என்பதை முன்கூட்டியே தெரிவிக்கவில்லை. ஒப்பந்தத்தில் வாங்குபவராக டெய்ஸி ஃபாரெஸ்ட் என்ற பெயர் இருந்தது. முழு தொகையும் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்ட பிறகே ஆவணங்களில் கையெழுத்திட்டோம்.
வீட்டை விற்பனைக்கு அறிவிப்பதற்கு முன் நடந்த Garage sale நிகழ்விற்கு யோஷித ராஜபக்சவும் யசாராவும் வந்திருந்தனர். அவர்கள் வீட்டை முழுவதும் சுற்றிப் பார்த்துச் சென்றனர்” என்றார்.
வசந்த ஜயசூரியாவின் சாட்சியம்
யசாரா அபேநாயக்கின் உறவினரான வசந்த ஜயசூரியவும் நீதிமன்றத்தில் இதன்போது சாட்சியம் அளித்தார்.
அவர் கூறியதாவது, “யசாராவும் யோஷித ராஜபக்சவும் நிச்சயதார்த்தம் செய்து திருமணத்திற்கு தயாராக இருந்தனர். லுஷான் ரத்நாயக்கவின் காணி விற்பனைக்கு இருப்பதை யோஷிதவிடம் தெரிவித்தேன்.
அந்த காணியை வாங்க அவர் விருப்பம் தெரிவித்தார். அதன் பின்னர் வாங்கும் நடவடிக்கைகளை நான் ஒருங்கிணைத்தேன்.
மேலும், காணி வாங்குவதற்கான முழுத் தொகையும் பணமாக ஒரு பயணப்பையில் கொண்டு வரப்பட்டது.
ஆவணங்களில் கையெழுத்திடும் நாளன்று பாதுகாப்பு அதிகாரியைப் போன்ற தோற்றமுடைய ஒருவர், பணம் நிரம்பிய பயணப்பையை ராஜகிரியிலுள்ள வங்கிக்கு கொண்டு வந்தார்.
காணியை வாங்க தேவையான முழுத் தொகையும் பணமாகவே கொண்டு வரப்பட்டது” என்றார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |