சீனா உடனான நட்புறவில் விரிசல்! முக்கிய தூதரகத்தை மூடியது இஸ்ரேல்
சீனாவுடனான ராஜதந்திர உறவுகளில் விரிசல் அதிகரித்து வரும் நிலையில், அந்நாட்டின் முக்கிய நகரொன்றில் இயங்கிவந்த தனது துணைத் தூதரகத்தை இஸ்ரேல் மூடியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஹாங்காங் செய்தி ஊடகங்கள் வெளியிட்ட செய்தியின்படி, சீனாவிலுள்ள சிச்சுவான் மாகாணத்தின் செங்டு நகரத்தில் அமைந்திருந்த இஸ்ரேலிய துணைத் தூதரகமே இவ்வாறு செயல்பாடுகளை நிறுத்திக்கொண்டுள்ளது. அண்மைக்காலமாக சீனாவுக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான பரஸ்பர உறவில் கசப்புணர்வு நிலவி வருகிறது.
குறிப்பாக, ஈரான் மற்றும் அரபு நாடுகளுடனான தனது உறவை வலுப்படுத்த சீனா முன்னெடுக்கும் முயற்சிகளே இஸ்ரேலின் இந்த தீர்மானத்துக்கு முக்கியக் காரணமாகப் பார்க்கப்படுகிறது.
உறவு சீர்குலைந்தமைக்கு காரணம்
முன்னதாக, சீனாவிலுள்ள தனது தூதரகப் பிரிவு ஒன்றை மூடவுள்ளதாக இஸ்ரேலிய அரசு குறிப்பிட்டிருந்தபோதிலும், அதற்கான பின்னணி குறித்து எவ்வித தெளிவான விளக்கத்தையும் அளித்திருக்கவில்லை.

இதேவேளை, பெய்ஜிங்கிலுள்ள முதன்மைத் தூதரகம் தவிர்த்து ஷாங்காய், குவாங்சோ மற்றும் ஹாங்காங் ஆகிய இடங்களில் இஸ்ரேலின் ஏனைய துணைத் தூதரகங்கள் இன்னமும் இயங்கி வருகின்றன.
காஸா மோதலின் போது பாலஸ்தீன தரப்புக்கு சீனா ஆதரவு தெரிவித்தமையும், ஹமாஸ் நடத்திய தாக்குதல்களுக்கு சீனா உடனடியாகக் கண்டனம் தெரிவிக்கத் தவறியமையுமே இரு நாடுகளுக்கும் இடையிலான உறவு சீர்குலைந்தமைக்கு பிரதான காரணமாகும்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |