சொல்லியடித்த இஸ்ரேல் : இரண்டு முக்கிய தளபதிகளை பறிகொடுத்தது ஈரான்
ஈரான் (iran)புரட்சி காவல் படையின் இரண்டு முக்கிய தளபதிகளை கொன்றுள்ளதாக இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் கட்ஸ்(israel katz) தெரிவித்துள்ளார்.
இதன்படி ஈரானிய புரட்சிகர காவல்படையின் வெளிநாட்டுப் பிரிவான குட்ஸ் படையின் பாலஸ்தீனப் படைப்பிரிவின் தலைவராக இருந்த சயீத் இசாதி, ஈரானிய நகரமான கோமில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் நடந்த தாக்குதலில் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் கட்ஸ் தெரிவித்தார்.
மிக முக்கிய தளபதி
ஈரானிய ஆட்சிக்கும் ஹமாஸுக்கும் இடையிலான முக்கிய ஒருங்கிணைப்பாளராகவும், ஒக்டோபர் 7 படுகொலையின் முக்கிய ஏற்பாட்டாளர்களில் ஒருவராகவும் இசாதி விளங்கினார்.
ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படையின் (IRGC) மூத்த தளபதிகளுக்கும் ஹமாஸின் முக்கிய நபர்களுக்கும் இடையிலான இராணுவ ஒருங்கிணைப்பில் இசாதி குறிப்பிடத்தக்க பங்கைக் கொண்டிருந்தார் என்று ஐ.டி.எஃப் மேலும் கூறியது. இஸ்ரேலுக்கு எதிரான பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு ஹமாஸுக்கு ஈரானிய நிதி ஆதரவை வழங்குவதற்கும் அவர் பொறுப்பாக இருந்துள்ளார்.
மற்றுமொரு தளபதி பலி
மேற்கு தெஹ்ரானில் இரவு முழுவதும் நடந்த தாக்குதலில், பென்ஹாம் ஷரியாரி என்று அடையாளம் காணப்பட்ட இரண்டாவது தளபதியைக் கொன்றதாக இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது.
தாக்குதல்களுக்கு மத்தியில் ஈரான் தனது அணுசக்தி திட்டம் குறித்து பேச்சுவார்த்தை நடத்தப் போவதில்லை என்றும், ஐரோப்பா அமைதிப் பேச்சுவார்த்தைகளை உயிர்ப்புடன் வைத்திருக்க முயற்சித்தது என்றும் தெஹ்ரான் கூறிய ஒரு நாளுக்குப் பிறகு இந்த தளபதிகளை இஸ்ரேல் கொன்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
