சட்ட நடவடிக்கைக்குச் செல்லும் யாழ். பேருந்து நிலைய மலசலகூட விவகாரம்!
யாழ். நகரில் மத்திய பேருந்து நிலைய வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள புதிய மலசலகூட தொகுதியை நிர்வகிப்பதில் இ.போ.ச. மற்றும் மாநகரசபை இடையே ஏற்பட்டுள்ள இழுபறி நிலையை அடுத்து, அதற்கான தீர்வைக் காண சட்ட ஆலோசனை பெற மாநகரசபை தீர்மானித்துள்ளது.
இன்று நடைபெற்ற மாநகரசபையின் மாதாந்தக் கூட்டத்தில், குறித்த விடயம் தொடர்பாக முதல்வர் மதிவதனி விடயத்தை முன்வைத்து, சட்ட ரீதியான ஆலோசனை பெறுவதற்கான அனுமதி முன்மொழிவை சமர்ப்பித்தார்.
இந்நிலையில், மக்களின் நலனுடன் தொடர்புடைய விடயமாக இது இருப்பதால், இரு தரப்பையும் சமரசத்துக்கு இணங்கச் செய்து தீர்வைக் காண வேண்டும் என்றும், ஈ.பி.டி.பி. உறுப்பினரும் முன்னாள் முதல்வருமான யோகேஸ்வரி வலியுறுத்தினார்.
சட்ட ஆலோசனை
மேலும், சட்டரீதியான நடவடிக்கை குறித்த திட்டத்தின் நோக்கத்தை பாதித்து காலத்தை வீணடிக்கச் செய்யும் என்றும் அவர் தெரிவித்தார்.

அத்துடன், சட்ட ரீதியான ஆலோசனை பெறப்படும் பட்சத்தில், அந்த ஆலோசனை சபையில் பிரஸ்தாபிக்கப்பட வேண்டும் என்றும் கூறினார். இதன் பின்னரே அடுத்த கட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
அதேநேரம், குறித்த விடயத்தில் சட்ட ஆலோசனை பெறாமல் நேரடியாகவே சட்ட நடவடிக்கைக்கு செல்ல வேண்டும் என உறுப்பினர் மதுசிகன் வலியுறுத்தினார்.
எனினும், சட்ட ஆலோசனை பெற்று அதன் பின்னர் அடுத்த கட்ட நடவடிக்கைகளுக்குச் செல்ல சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |