தன்னிச்சையாக செயற்படும் வெற்றிலைக்கேணி கடற்தொழிலாளர் சங்கம்
யாழ்ப்பாணம் (Jaffna) வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணி கடற்தொழிலாளர் கூட்டுறவு சங்கம் தமக்கு அநீதி இழைத்துள்ளதாக கடற்றொழிலாளர் ஒருவர் குற்றம் சாட்டியுள்ளார்.
இது தொடர்பில் தெரியவருகையில், வடமராட்சி கிழக்கு தாளையடி பகுதியில் அமைந்திருக்கும் நன்னீர் திட்ட நிறுவனத்தால் வடமராட்சி கிழக்கு கடற் தொழிலாளர் கூட்டுறவு சங்களின் சமாசத்திற்குட்பட்ட அனைத்து சங்கங்களுக்கும் தலா இரண்டு படகுகள் இயந்திரத்துடன் இலவசமாக வழங்கப்பட்டு வருகின்றது.
மீன்பிடி சங்களுக்கு இலவசமாக வழங்கப்படும் படகுகளை குறித்த சங்கங்கள் தாமாகவே அங்கத்தவர்களுடன் முடிவெடுத்து பயனாளிகளுக்கு வழங்க முடியும்.
இதனடிப்படையில், வெற்றிலைக்கேணி கடற் தொழிலாளர் கூட்டுறவு சங்கத்திற்கும் இரண்டு படகுகள் அன்பளிப்பு செய்யப்பட்டுள்ளது.
குறித்த படகு வழங்கும் நிகழ்வு வடமராட்சி கிழக்கு கடற் தொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் சமாச தலைவர் தலைமையில் பத்தாம் திகதி வெற்றிலைக்கேணி பொது மண்டபத்தில் இடம்பெற்றுள்ளது.
குலுக்கல் முறையில் தெரிவு இடம் பெற்று இரண்டு பயனாளிகளுக்கு படகு இயந்திரத்துடன் வழங்கப்பட்டுள்ளது.
இருப்பினும், இது தொடர்பாக கடற்றொழிலாளி ஒருவர் தனது அதிருப்தியை தெரிவித்துள்ளார்.
வெற்றிலைக்கேணி மீன்பிடிச் சங்கத்திற்கு உட்பட்ட கடற்றொழிலாளர்கள் பலர் வறுமை கோட்டிற்குள் காணப்படுவதால் படகு வாங்க முடியாத வறுமை கோட்டுக்கு உட்பட்ட கடற்றொழிலாளர்களை தெரிவு செய்து குலுக்கல் முறையில் அவர்களில் யாராவது இரண்டு பயனாளிகளுக்கு குறித்த படகுகளை வழங்குமாறு சங்கத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், வெற்றிலைக்கேணி மீன்பிடிச் சங்கம் பொதுச் சபையின் தீர்மானத்தின் படி சங்கத்தின் அனைத்து உறுப்பினர்களையும் உள்ளடக்கி குலுக்கல் முறையில் தேர்வு செய்து இரண்டு பயனாளிகளுக்கு வழங்கியுள்ளது.
இந்தநிலையில், வழங்கப்பட்ட படகு கடற்தொழில் செய்யாத ஒருவருக்கும் மற்றும் ஏற்கனவே இலவசமாக சங்கத்தால் படகு வழங்கப்பட்டவருக்குமே குலுக்கல் முறையில் படகு வழங்கப்பட்டதாக குறித்த கடற்றொழிலாளர் குற்றம் சாட்டியுள்ளார்.
தம்மைப் போன்ற படகு வாங்க முடியாத ஏழைகள் தற்போதும் அப்பகுதியில் காணப்படுவதால் தமது கோரிக்கையை ஏற்காமல் வெற்றிலைக்கேணி மீன்பிடி சங்கம் அநீதி இழைத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
வெற்றிலைக்கேணி மீன்பிடி சங்கத்தில் பொருளாளராக தான் இருக்கின்ற வேளையிலும் இடம்பெறும் கூட்டங்கள் தொடர்பாக தனக்கு அறிவிக்காமல் குறித்த சங்க உறுப்பினர்கள் தன்னிச்சையாக செயல்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
படகு வாங்க முடியாத நிலையிலும் மிகவும் வறுமையில் தனது குடும்பம் உட்பட பல குடும்பங்கள் காணப்படுவதால் படகு வாங்க முடியாத நிலையில் உள்ளோருக்கு இந்த படகை வழங்கமாறு பலமுறை கோரிக்கை விடுத்தும், சங்கம் தன்னிச்சையாக செயற்பட்டதாக அவர் குற்றம் சாட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
