மறக்க முடியாத பல நல்ல அனுபவங்களைத் தந்த யாழ்ப்பாணம்! இந்திய சுற்றுலாப்பயணிகள் நெகிழ்ச்சி
சுற்றுலாத்துறையில் வடக்கு மாகாணம் இன்னமும் மிகப்பெரிய உயரத்தை அடைய வேண்டும் என எதிர்பார்க்கின்றோம் என்று இந்தியாவின் 5 மாநிலங்களிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்த துவிச்சக்கரவண்டிப் பயணக் குழுவினர் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர்.
“யாழ்ப்பாணம் எங்களுக்கு மிகவும் பிடித்திருக்கின்றது. இந்தப் பிரதேசத்தின் அழகை வியந்து ரசித்தோம். இங்குள்ள மக்களின் விருந்தோம்பல் பண்பு எம்மைக் கவர்ந்திழுத்துள்ளது. மறக்க முடியாத பல நல்ல அனுபவங்களைத் தந்த இங்கு, எமது நண்பர்கள் மற்றும் உறவினர்கள் உள்ளிட்ட ஏனையோரையும் சுற்றுலா வருமாறு நாம் ஊக்குவிப்போம்” எனவும் தமது கருத்துக்களை பகிர்ந்துக்கொண்டுள்ளனர்.
இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான நீண்டகால நட்புறவை மேலும் வலுப்படுத்தும் வகையிலும், வடக்கு மாகாணத்தின் சுற்றுலாத்துறையை விரிவுபடுத்தும் நோக்கிலும் இந்தியாவிலிருந்து வருகை தந்த 'டீம் பைசன்' (Team Bison) துவிச்சக்கரவண்டிப் பயண அணியினருக்கான கௌரவிப்பு நிகழ்வு, வடக்கு மாகாண சுற்றுலாப் பணியகத்தின் தலைவர் ஜே.விவேகானந்தன் தலைமையில் யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் ஹோட்டலில் நேற்று (04.04.2026) சனிக்கிழமை இரவு சிறப்பாக நடைபெற்றது.
வடக்கு மாகாண ஆளுநர்
இந்நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றிய வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன், இந்தியாவிலிருந்து வருகை தந்த குழுவினருக்குத் தனது நன்றிகளைத் தெரிவித்துக்கொண்டார்.

அவர் தனதுரையில் மேலும் குறிப்பிடுகையில், ஆயிரக்கணக்கான வருடங்களாக இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் மிகச் சிறந்ததும் நெருக்கமானதுமான உறவு காணப்படுவதுடன், இந்தியா எமக்குத் தொடர்ந்தும் பல வழிகளில் உதவிகளை வழங்கி வருகின்றது என்றும் கூறியுள்ளார்.
“அத்தோடு, மூன்று தசாப்த காலக் போரால் வடக்கு மாகாணம் கடுமையாகப் பாதிக்கபட்டிருந்தாலும், தற்போது இங்கு மிகவும் அமைதியான சூழல் நிலவுகின்றது. யாழ்ப்பாணத்துக்கும் சென்னை மற்றும் திருச்சி ஆகிய நகரங்களுக்கும் இடையிலான நேரடி விமான சேவை, காங்கேசன்துறைக்கும் நாகபட்டினத்துக்கும் இடையிலான கப்பல் சேவை என்பன ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர், இந்தியச் சுற்றுலாவிகளின் வருகை எமது மாகாணத்தில் கணிசமாக அதிகரித்துள்ளது.
நாமும் ஒரு சகோதரனைப் போல இந்தியாவுடன் மிகச் சிறந்த உறவைப் பேணி வருகின்றோம்” எனவும் ஆளுநர் தெரிவித்துள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |




