யாழில் பிரபல வர்த்தக நிலையம் மீது மர்ம நபர்கள் தாக்குதல் - ஸ்தலத்தில் தடயவியல் காவல்துறை!
யாழ்ப்பாணம் கல்வியன்காடு பகுதியில் அமைந்துள்ள பிரபல வர்த்தக நிலையம் ஒன்றின் மீதும் அதன் உரிமையாளர் மீதும் இனம் தெரியாத குழுவினர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
குறித்த சம்பவம் நேற்று இரவு 10.10 மணியளவில் கல்வியங்காடு சந்தி பகுதியில் இடம்பெற்றுள்ளது எனவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
குறித்த வர்த்தக நிலையத்தின் உரிமையாளர் வர்த்தக நிலையத்தினை மூடுவதற்கு தயாரான நேரத்தில் வாள் மற்றும் கொட்டன்களுடன் 3 மோட்டார் சைக்கிளில் வந்த 7 பேர் கொண்ட குழுவினரே குறித்த தாக்குதலை நாடத்தியுள்ளனர்.
வர்த்தக நிலையம் மீது தாக்குதல்

மேற்படி குழுவினர் வர்த்தக நிலையம் மீது வெற்று பியர் போத்தல்களால் தாக்குதல் நடத்தியதுடன் உரிமையாளரை வாளினால் வெட்டிவிட்டு வர்த்தக நிலையத்தினையும் அடித்து நொறுக்கியுள்ளனர்.
பின்னர் வர்த்தக நிலையத்திலிருந்த ஐந்து லட்சம் ரூபா பணத்தினையும் குறித்த குழுவினர் திருடி சென்றுள்ளனர். வெட்டு காயங்களுக்கு உள்ளான வர்த்தக நிலைய உரிமையாளர் யாழ் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தீவிர விசாரணை

இச்சம்பவம் தொடர்பில் யாழ் மாவட்ட குற்றத்தடுப்பு காவல்துறையினர், தடயவியல் காவல்துறையினர் மற்றும் கோப்பாய் காவல்துறையினர் இணைந்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
அத்துடன் சி.சி.டி.வி காணொளிகளின் அடிப்படையில் குறித்த குழுவினரை கைது செய்வதற்குரிய நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.



