யாழ். மாநகர சபை அமர்வை முகநூலில் ஒளிபரப்பிய சைக்கிள் உறுப்பினர்
யாழ். மாநகர சபை (Jaffna Municipal Council) அமர்வை முகநூல் ஊடாக நேரலையில் ஒளிபரப்பிய உறுப்பினர் ஒருவருக்கு மாநகர முதல்வரால் கடும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
யாழ். மாநகர சபையின் மாதாந்த அமர்வு நேற்றைய தினம் (16.07.2025) முதல்வர் மதிவதனி விவேகானந்தராஜா தலைமையில நடைபெற்றது.
மாநகர சபை உறுப்பினர்களிடையே விவாதம் நடைபெற்ற நிலையில் சபை அமர்வில் பங்கேற்ற அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் இரத்தினம் சதீஸ் வெளியே சென்று பார்வையாளர் பகுதியில் இருந்து மாநகர சபை அமர்வை முகநூல் ஊடாக நேரலையில் ஒளிபரப்பினார்.
மன்னிப்பு வழங்குங்கள்
இதனை அவதானித்த ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணியின் மாநகர சபை உறுப்பினர் ப. தர்சானந் குறித்த விடயம் தொடர்பாக மாநகர முதல்வரின் கவனத்துக்கு கொண்டு சென்றார்.
சபை ஒழுங்கு விதிகளுக்கு மாறாக உறுப்பினர் செயல்பட்டமையால் சபை அமர்வில் பங்கேற்க ஒரு மாதம் தடை விதிப்பது சம்பந்தமாக முதல்வர் சபை உறுப்பினர்களின் ஆலோசனையை கேட்டார்.
இதன்போது எழுந்த ஈ. பி. டி. பி. உறுப்பினர் இளங்கோவன், “அவ்வாறு செய்த உறுப்பினர் புதியவர் என்பதால் மன்னிப்பு வழங்குங்கள்” என்று கோரினார்.
கடும் எச்சரிக்கை
ஏனைய கட்சிகளை சேர்ந்த சிலர் குறித்த உறுப்பினரிடம் தன்னிலை விளக்கம் கோர வலியுறுத்தினர்.
இதையடுத்து, சபா மண்டபத்துக்கு சென்ற உறுப்பினர் தான் ஓர் ஊடகவியலாளர் என்றும் அதனாலேயே நேரலை செய்தேன் என்று கூறினார்.
ஊடகவியலாளர்கள் இருக்கும் போது உறுப்பினர் அவ்வாறு செயற்பட்டமை தொடர்பாக கடும் எச்சரிக்கை விடுத்த மாநகர முதல்வர் இனிமேல் இவ்வாறு சபை அமர்வில் நடந்தால் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும்” என்று எச்சரித்தார்.
இதைத் தொடர்ந்து சபை அமர்வு வழமை போன்று நடைபெற்றது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

