யாழ். மாநகர சபை சுகாதார பிரிவினரின் அதிரடி முடிவு: மக்களுக்கு முக்கிய அறிவிப்பு!
யாழ்ப்பாணம் மாநகர சபை வைத்திய அதிகாரிகள், யாழ்ப்பாணம் மாநகர சபை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம், யாழ். மாநகர சபை சுகாதார மாதுகள் சங்கம் ஆகியன இணைந்து, மாநகர சபை ஆணையாளர் மற்றும் கணக்காளரின் செயற்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து பணி பகிஸ்கரிப்பினை அறிவித்துள்ளதாக தெரியவந்துள்ளது.
இதனால் யாழ்ப்பாணம் மாநகர சபை சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையின் பொது சுகாதார சேவைகள், கர்ப்பிணித் தாய்மார்களுக்கான சிகிச்சை நிலையங்கள் நாளை (28) முதல் முடங்கும் அபாயம் காணப்படுகின்றது.
யாழ்ப்பாணம் மாநகர சபை சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையின் பொது சுகாதார பரிசோதகர்கள் மற்றும் குடும்ப நல உத்தியோகத்தர்களின் மேலதிக நேர கொடுப்பனவிற்கு, எங்கேயும் நடைமுறைப்படுத்தப்படாத, எந்த ஒரு நிதிச் சுற்றறிக்கை மூலமும் பிரசுரிக்கப்படாத நடைமுறையினை மாநகர சபை கணக்காளர் பகுதி எதேச்சையாக மேற்கொள்ள முயல்வதால் இந்த பணிப்பகிஸ்கரிப்பு மேற்கொள்ளப்படவுள்ளதாக கூறப்படுகிறது.
பணிப்பகிஷ்கரிப்பு
இதன்படி, பொது சுகாதார பரிசோதகர்கள் மற்றும் குடும்ப நல உத்தியோகத்தர்கள் நாளை (28) முதல் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடடுபடவுள்ளதாக தெரியவந்துள்ளது.
இது தொடர்பில் வெளியாகியுள்ள அறிக்கையில், வினைத்திறனற்ற கணக்காளர் (ii) இனால் பாதிக்கப்பட்டு மனவுளைச்சலுக்கு உள்ளான ஊழியர்கள் குறித்த பணிப்பகிஷ்கரிப்பு நடவடிக்கையினை மேற்கொள்ள உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
அத்துடன், இதனால் பொதுமக்களுக்கு ஏற்படும் அசௌகரியங்களுக்கு முற்று முழுதான பொறுப்பை மாநகர சபை ஆணையாளரும் கணக்காளர் பகுதியினருமே பொறுப்பேற்க வேண்டும் என அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
