தலைவர் பிரபாகரனின் புகைப்படம்- யாழின் பிரபல பத்திரிகை நிறுவனத்தின் பணிப்பாளருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு!
யாழின் பிரபல பத்திரிகை நிறுவனத்தின் நிர்வாகப் பணிப்பாளர் ஈஸ்வரபாதம் சரவணபவன் ம்றும் பத்திரிகை ஆசிரியர் ஆகியோரை வாக்கு மூலம் பெற்றுக்கொள்வதற்காக அழைத்த போதும் அவர்கள் இருவரும் முன்வராத நிலையிலேயே பொலிஸாரால் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், இலங்கையில் தடை செய்யப்பட்ட அமைப்பான தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் பிறந்த நாளன்று அவரது ஒளிப்படத்தையும் சொற்களையும் வெளியிட்டமை தொடர்பில் யாழ்ப்பாணத்தை தளமாகக் கொண்டு இயங்கும் பத்திரிகை நிறுவனம் மீது வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியினால் இந்த விண்ணப்பம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இலங்கையில் தடை செய்யப்பட்ட அமைப்பான தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் பிறந்த நாளான நவம்பர் 26ஆம் திகதி அவரது ஒளிப்படைத்தையும் சொற்களையும் பயன்படுத்தி பத்திரிகையில் வெளியிட்டமை 1979ஆம் ஆண்டு 48ஆம் இலக்க பயங்கரவாத தடைச் சட்டத்துக்கு உள்பட்டு தண்டனைக்குரிய குற்றம் புரியப்பட்டுள்ளது என்று விண்ணப்பத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த வழக்கு விண்ணப்பம் டிசெம்பர் மாதம் 5ஆம் திகதி நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டது. அன்றைய தினம் விசாரணைக்கு எடுத்த மன்று வழக்கை மார்ச் 21ஆம் திகதி வரை ஒத்திவைத்தது. இந்த நிலையில் டிசெம்பர் 7ஆம் திகதி நகர்த்தல் பத்திரம் இணைத்து பொலிஸார் வழக்கை மீள அழைத்தனர்.
பத்திரிகையின் நிர்வாகப் பணிப்பாளரும் பதிப்பாசிரியருமான ஈஸ்வரபாதம் சரவணபவன், ஆசிரியர் ஆகியோரை நீதிமன்றில் முன்னிலையாகி பொலிஸாருக்கு வாக்கு மூலம் வழங்க உத்தரவிடக் கோரினர்.
அதனடிப்படையில் பொலிஸாரால் குறிப்பிட்ட இருவரையும் ஜனவரி 19ஆம் திகதி பொலிஸாருக்கு வாக்கு மூலம் வழங்க முன்னிலையாகுமாறு அழைப்பாணை அனுப்ப நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதேவேளை, வழக்கின் அடிப்படையைத் தெரிந்திருக்காத முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் உதயன் நிர்வாக உறுப்பினருமான ஈஸ்வரபாதம் சரவணபவன், நீதிமன்றை அவமதிக்கும் வகையில் ஊடகவியலாளர் சந்திப்பை இன்று நடத்தியிருந்தார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.