யாழில் பாரிய முற்றுகைப் போராட்டத்தில் கடற்றொழிலாளர் - காவல்துறை புலனாய்வாளர்கள் குவிப்பு!
யாழ்ப்பாணம் - பருத்தித்துறை பகுதியில் கடற்றொழிலாளர் சங்கங்களால் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
இந்த போராட்டமானது இன்று காலை 7 மணியளவில் பருத்தித்துறை துறைமுகத்தில் ஆரம்பமாகி, பருத்தித்துறை வீதியை மறித்து முன்னெடுக்கப்பட்டதோடு, பின்னர் அங்கிருந்து பருத்தித்துறை பிரதேச செயலகம் வரை சென்று அங்கு பிரதேச செயலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
அதனையடுத்து, பிரதேச செயலகத்தின் அதிகாரிகள் மற்றும் காவல்துறையினருடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் போது வழங்கப்பட்ட உறுதிமொழியையடுத்து, போராட்டம் தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டுள்ளது.
வழங்கப்பட்ட உறுதிமொழி
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
சுருக்கு வலை உட்பட்ட சட்ட விரோத கடற்றொழில்களை தடுத்து நிறுத்துமாறு கோரி வடமராட்சி வடக்கில் 14 கடற்றொழிலாளர் சங்கங்களால் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
பருத்தித்துறை பிரதேச செயலக ஊழியர்கள் எவரும் கடமைக்கு உள்ளே செல்லமுடியாதவாறு பருத்தித்துறை பிரதேச செயலக வாயில்கள் மறிக்கப்பட்டு போராட்டகாரர்கள் அமர்ந்திருந்து வீதியை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வீதிமறியல்
மேலும் எமக்குரிய தீர்வு கிடைக்கும் வரை போராட்டத்தில் இருந்து பின்வாங்கப்போவதில்லை என போராட்டகாரர்கள் தெரிவித்துள்ளனர்.
இதன்போது, கடற்தொழிலாளர்களை வாழ விடு அல்லது சாகவிடு, கடற்தொழிலாளர்களின் வயிற்றில் அடிக்கும் சுருக்கு வலையை உடனடியாக நிறுத்து, தடை செய்யப்பட்ட அனைத்து தொழிலையும் உடனடியாக நிறுத்து போன்ற கோசங்களை எழுப்பியவாறு மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
காவல்துறை பிரசன்னம்
இந்த போராட்டம் இடம்பெறும் பகுதியில் சிறிலங்கா காவல்துறையினர் மற்றும் புலனாய்வாளர்கள் குவிக்கப்பட்டு கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.
இதன்போது அவ்வழியே நீதிமன்ற கடமைக்காக சென்ற நீதவானும் போராட்டம் காரணமாக திரும்பிச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.












