யாழ்.பொன்னாலையில் இயங்குநிலையிலிருந்த கைபேசிகள் வீதியிலிருந்து மீட்பு!
பொன்னாலையில் கைவிடப்பட்ட நிலையில் காணப்பட்ட இரண்டு ரப் மற்றும் நான்கு கைபேசிகள் மீட்கப்பட்டுள்ளன.
இன்று பிற்பகல் 5.30 மணியளவில் இளைஞர்கள் சிலரால் மேற்படி பொருட்கள் மீட்கப்பட்டன. பொன்னாலை வரதராஜப் பெருமாள் ஆலயத்திற்கு செல்லும் பிரதான வீதியில், பொன்னாலை தெற்கு மங்களேஸ்வரன் வீதிக்கு திரும்பும் இடத்தில், நீர்க்குழாய் திருகி அமைக்கப்பட்ட மூடி இல்லாத சிமெந்துக் கட்டுக்குள் பொலித்தீன் பை ஒன்றிற்குள் வைத்து கட்டப்பட்ட நிலையில் இவை காணப்பட்டன.
ரப் மற்றும் தொலைபேசிகள் பயன்படுத்தக்கூடிவாறு நல்ல நிலையில் காணப்பட்டன. இன்று பிற்பகல் 3 மணிக்கு பின்னர் இந்த இடத்தில் இவை போடப்பட்டிருக்கலாம் எனக் கூறப்படுகின்றது.
இது தொடர்பாக வட்டுக்கோட்டை பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வருகைதந்த பொலிஸார் அவற்றைப் பெற்றுச் சென்றனர். இவை யாருடையவை? யார் கொண்டுவந்து வைத்தார்கள் என்பது தொடர்பாக பொலிஸார் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.