போலி தமிழ்தேசியவாதி : துகிலுரிக்கும் யாழ்.பல்கலை மாணவர்கள்
தங்களை தமிழ் தேசியம் என்று மார்தட்டி, கண்டபடி பல்கலைக்கழக மாணவர்களை விமர்சித்துக்கொண்டு திரிகின்றவர்கள் தமிழ் தேசியம் சார் போராட்டங்களிலும், நினைவேந்தல்களிலும் கலந்து கொள்கின்றார்களா என எமக்கு சந்தேகமாக உள்ளது என யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவன் தெரிவித்துள்ளார்.
நேற்றையதினம் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் அவர் இதனை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
வாக்கு அரசியலுக்காக பயன்படுத்தப்படும் தமிழ் தேசியம்
தமிழ் தேசியத்தை உங்களது வாக்கு அரசியலுக்காக பயன்படுத்துகின்றீர்களா என்று எமக்கு சந்தேகமாக உள்ளது. நீங்கள் தமிழ் தேசிய உணர்வாளர் என்றால் தமிழ் மக்களது போராட்டங்கள், நினைவேந்தல்களில் பங்கெடுங்கள். ஆனால் உங்களை அங்கு எல்லாம் காண முடிவதில்லை.

2009ற்கு பின்னர் தமிழ் - சிங்கள மக்கள் ஒன்றாக இருப்பதாக கூறுகின்ற நீங்கள் எதற்காக பௌத்த விகாரைகளை தமிழர் தாயகங்களில் நிறுவுகிறீர்கள். தையிட்டி காணி, வெடுக்குநாறிமலை, குருந்தூர் மலை ஆகியன ஆக்கிரமிக்கப்படுகிறது. அத்துடன் திருகோணமலையில் புத்தர் சிலை விவகாரம் தொடர்கிறது. கிவுல் ஓயா திட்டத்தை அறிமுகப்படுத்துகின்றீர்கள், அரசை பயங்கரவாதத்தில் இருந்து பாதுகாக்கும் சட்டம் என்ற ஒன்றை அறிமுகப்படுத்துகின்றீர்கள். ஏன் இவ்வாறான இன ஆக்கிரமிப்புகளை செய்கின்றீர்கள்?
என்ன மாற்றம் நிகழ்ந்துள்ளது..!
இந்த அரசானது தேர்தல் பிரசாரத்தின்போது கூறியது தாங்கள் ஆட்சி பீடம் ஏறி 24 மணிநேரத்துக்குள் அரசியல் கைதிகள் அனைவரையும் விடுதலை செய்வதாக. எங்கு விடுதலை செய்தீர்கள்? 10பேர் இப்போதும் துன்பத்துடன் சிறைவாசம் அனுபவிக்கின்றனர்.

இன்றுவரை காணாமல் ஆக்கப்பட்டோரது பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கவில்லை. நேற்றுகூட ஒரு காணாமல் ஆக்கப்பட்டோரின் தாயார் உயிரிழந்துள்ளார்.
ஆட்சி மாறினாலும் காட்சி மாறவில்லை
சிங்கள மக்களுக்கு இவ்வாறு ஒரு நிலை ஏற்பட்டால் நீங்கள் பொறுமையாக இருப்பீர்களா? உரிமைக்காக போராடுகின்ற மாணவர்களின் குரல் வளையை இந்த அரசு தொடர்ச்சியாக நசுக்குகிறது. கடந்த கால ஆட்சியாளர்களது செயற்பாட்டையே இந்த அரசும் செய்கிறது. ஆட்சி மாறினாலும் காட்சி மாறவில்லை.

தமிழ் மக்களது பிரச்சினைகளுக்கு தீர்வுகள் கிடைக்காத பட்சத்திலேயே எம்மால் போராட்டங்கள் முன்னெடுக்கப்படுகிறது. தமிழ் மக்களுக்கான பிரச்சினைக்கு தீர்வு கொடுத்தால் நாங்கள் இந்த நாட்டில் சந்தோஷமாக வாழ முடியும் என்று அரசுக்கு கூறுகிறோம்.
தீர்வு தராவிட்டால் நினைவேந்தல்கள் தொடரும், போராட்டங்கள் தொடரும், எதிர்கால தலைமுறைக்கு யுத்த வடுக்கள் தொடர்பான விடயங்கள் பல்கலைக்கழக சமூகத்தால் கடத்தப்படும் என்றார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |