புலமைப்பரிசிலில் வெளிநாடு சென்று மாயமான யாழ். பல்கலை ஊழியர்கள் - வெளியான அறிக்கை
புலமைப்பரிசில் செயல்திட்டங்களின் கீழ் வெளிநாடுகளுக்கு சென்ற யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தை (University of Jaffna) சேர்ந்த கல்விமான்களும் கல்வித்துறை சாரா அலுவலர்களுமாக நூறுக்கும் அதிகமானவர்கள் அந்த செயல்திட்டங்கள் நிறைவடைந்த பின்னர் நாடு திரும்பி மீண்டும் கடமைக்கு சமுகமளிக்கவில்லை என கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர்களுக்கான 16 கோடி 60 இலட்சம் ரூபாய்க்கும் அதிகமான பிணைப்பணத்தை மீளப் பெறுவதற்கு பல்கலைக்கழகம் நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்றும் கணக்காய்வாளர் நாயகம் தெரிவித்துள்ளர்.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 2023 வருடாந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கும் கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கையின் பிரகாரம் 80 கல்விமான்களும் 21 கல்வித்துறை சாரா அலுவலர்களும் புலமைப்பரிசில் செயல்திட்டங்களின் கீழ் வெளிநாடுகளுக்குச் சென்றுவிட்டு அவை நிறைவடைந்த பிறகு நாடு திரும்பிக் கடமைகளைப் பொறுப்பேற்கவில்லை.
பல்கலைக்கழகம் நடவடிக்கைகளை எடுக்கவில்லை
1980ஆம் ஆண்டு தொடக்கம் 2023ஆம் ஆண்டு வரையான காலப் பகுதியில் இத்தகைய புலமைப்பரிசில் செயல்திட்டங்களுக்கு சென்று விட்டு நாடு திரும்பாமல் இருப்பவர்களிடம் இருந்து 16 கோடி 62 இலட்சத்து 98 ஆயிரத்து 684 ரூபாய் பிணைப் பணத்தை மீளப் பெறுவதற்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் உகந்த நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்றும் கணக்காய்வாளர் நாயகம் குறிப்பிட்டிருக்கிறார்.
அதேவேளை திரும்பப் பெறப்பட்ட 6 கோடி 17 இலட்சம் ரூபாய்க்கும் அதிகமான பிணைப்பணம் திறைசேரிக்கு அனுப்பப்படவில்லை என்றும் கணக்காய் வாளர் நாயகம் கண்டுபிடித்திருக்கிறார்.
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் சுற்றறிக்கை ஒன்றின் பிரகாரம் பரீட்சைகள் நடத்தப்பட்டு மூன்று மாத காலத்திற்குள் வெளியிடப் படவேண்டிய முடிவுகள் 2019 - 2023 காலப்பகுதியில் பதினொரு பீடங்களில் நான்கு மாதங்கள் தொடக்கம் 27 மாதங்கள் வரை தாமதிக்கப்பட்டே வெளியிடப்பட்டதாகவும் அறிக்கையில் கூறப்பட்டிருக்கிறது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
