மயானத்திற்கு அருகில் அநாதரவாக விடப்பட்டிருந்த வாகனம் - விசாரணையில் வெளியான தகவல்!
யாழ்ப்பாணம் மீசாலை வேம்பிராய் பொது மயானத்துக்கு அருகாமையில் அநாதரவாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வான் ஒன்றை காவல்துறையினர் மீட்டுள்ளனர்.
இந்த வானை இன்று காலை காவல்துறையினர் மீட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். யாழ்.கைதடிப் பகுதியில் இருந்து கடத்தப்பட்ட வானே இன்று அநாதரவாக விடப்பட்ட நிலையில் மீட்க்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
யாழ்.கைதடி மேற்கில் விற்பனைக்காக விடப்பட்டிருந்த ஹயஸ் வாகனத்தை நேற்று முன்தினம் பார்வையிடச் சென்ற நபர்கள் அதனை ஓடிப் பார்ப்பதாக கூறிக் கடத்திச் சென்றுள்ளனர்.
காவல்துறையில் முறைப்பாடு
குறித்த வாகனக் கடத்தல் தொடர்பில் வாகன உரிமையாளரால் சாவகச்சேரி காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது. அதனையடுத்து காவல்துறையினர் தீவிர விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.
இவ்வாறான நிலையில், மீசாலை வேம்பிராய் பொது மயானத்திற்கு அருகாமையில் இலக்கத் தகடுகள் அகற்றப்பட்டு, அநாதரவாக விடப்பட்டிருந்த நிலையில் இன்று மீட்கப்பட்டுள்ளது.
விசாரணை
கடத்தல் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளைச் சாவகச்சேரி காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.


