ஜன நாயகன் திரைப்பட வெளியீட்டில் சர்ச்சை - சற்றுமுன் நீதிமன்றத்தின் உத்தரவு
ஜனநாயகன் திரைப்படத்திற்கு யு/ஏ சான்றிதழ் வழங்க வேண்டும் என்ற சென்னை உயர் நீதிமன்ற தனி நீதிபதியின் உத்தரவை இரத்து செய்து தலைமை நீதிபதி அமர்வு உத்தரவிட்டுள்ளது.
ஹெச். வினோத் இயக்கத்தில் விஜய்யின் நடிப்பில் உருவான திரைப்படம் 'ஜன நாயகன்' திரைப்படம் இம்மாதம் கடந்த 9 ஆம் திகதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
தணிக்கை சான்றிதழ் வழங்கப்படாமையினால் இந்த திரைப்படம் வெளியாவதில் சிக்கல்கள் எழுந்தன. இந்நிலையில் தயாரிப்பு நிறுவனம் ஜனவரி ஆறாம் திகதி சென்னை உயர் நீதிமன்றத்தை நாடியது.
மேல் முறையீடு
வழக்கை விசாரித்த நீதிபதி பி.டி. ஆஷா, "தணிக்கை வாரியம் கூறிய திருத்தங்களைச் செய்த பிறகு சான்றிதழை வழங்க முடிவு செய்யப்பட்டும், அதற்குப் பிறகு படத்தை ரிவைசிங் கமிட்டிக்கு அனுப்ப முடிவு செய்தது சட்டத்திற்கு அப்பாற்பட்டது.

ஆகவே தணிக்கை வாரியத் தலைவரின் முடிவைத் தள்ளிவைத்துவிட்டு, இந்தப் படத்திற்கு சான்றிதழை வழங்க வேண்டும்" என உத்தரவிட்டார்.
இந்தத் தீர்ப்பை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்திலேயே மேல் முறையீடு செய்தது தணிக்கை வாரியம்.
திரைப்படத்திற்கு தணிக்கைச் சான்றிதழ்
திரைப்படத்திற்கு தணிக்கைச் சான்றிதழ் வழங்குவது தொடர்பாகத் தணிக்கை சபை தாக்கல் செய்த மேன்முறையீட்டு வழக்கை, சென்னை மேல் நீதிமன்றம் திகதி குறிப்பிடாமல் ஒத்திவைத்திருந்தது.

இந்தநிலையில் குறித்த திரைப்படத்திற்கான இறுதி தீர்ப்பு இன்று (27) அறிவிக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி 'ஜன நாயகன்' திரைப்படத்திற்கு தணிக்கை சான்று உடனே வழங்க உத்தரவிட்ட தனி நீதிபதி தீர்ப்பை சென்னை மேல் நீதிமன்றம் இரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |