ஜனாஸா விவகாரம்: இராஜாங்க அமைச்சர் வெளியிட்ட விடயம்
கொரோனா வைரஸ் தாக்கத்தினால் உயிரிழப்பவர்களின் இறுதி கிரியைகள் தொடர்பில் விசேட சுகாதார நிபுணர் குழுவின் அறிக்கையின் தீர்மானத்தில் அரசியல் தலையீடுகள் ஏதும் கிடையாது என கிராமிய வீதிகள் மற்றும் பிற உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சர் நிமல் லன்சா தெரிவித்துள்ளார்.
நாட்டு மக்களை கொரோனா வைரஸ் தாக்கத்தில் இருந்து பாதுகாக்கும் பொறுப்பு அரசாங்கத்துக்கு உண்டு எனவும் அவர் மேலும் தெரிவித்துளார். காலி மாவட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி குழு கூட்டத்தில் கலந்துக் கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், கொரோனா வைரஸ் தாக்கத்தினால் உயிரிழப்பவர்களின் இறுதி கிரியைகள் குறித்து விசேட நிபுணர் குழு வழங்கியுள்ள தீர்வுக்கு நாம் இணங்குகின்றோம். அந்தத் தீர்மானத்தில் அரசியல்வாதிகள் தலையிடக் கூடாது. கொரோனா வைரஸ் தாக்கத்தில் இருந்து நாட்டு மக்கள் அனைவரையும் பாதுகாக்கும் பொறுப்பு அரசாங்கத்திற்கு உண்டு. எதிர்வரும் 22ஆம் திகதி வர்த்தக விமானங்களுக்காக விமான நிலையங்கள் திறக்கப்படவுள்ளன.
இந்த வர்த்தக விமானங்களில் இலங்கைக்கு வருகைத் தருபவர்களுக்காக சுகாதார பிரிவினரின் ஆலோசனைக்கமைய அவர்கள் ஹோட்டல்களில் தங்க வைப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்கப்பட்டுள்ளன. அதே போல் வெளிநாடுகளில் உள்ள 68 000 இலங்கையர்களை நாட்டுக்கு அழைத்து வர தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அவர்கள் இந்த மாதம் 22ஆம் திகதியின் பின்னர் அவர்களுக்கு விருப்பமான விமானங்களில் இலங்கை வர கூடிய ஏற்படுகளை மேற்கொள்வது எமது நோக்கம்.
அதே போல் சுற்றுலா வர்த்தகத்துடன் தொடர்புடைய மக்களுக்காக சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்காக உக்ரேன் சுற்றுலா பயணிகள் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டனர். இந்த வேலைத்திட்டத்தில் உள்ள குறைபாடுகளை அடையாளம் கண்டு எதிர்காலத்தில் இவ்வாறான வேலைத்திட்டமொன்றை எவ்வாறு முன்னெடுப்பது என்ற அனுபவத்தைப் பெறுவதே இதன் நோக்கமாகும் .
கொரோனா வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்த நாட்டுமக்களின் ஒத்துழைப்பு அவசியமாகும். தற்போது வைரஸ் பரவல் ஒப்பீட்டளவில் கட்டுப்பாட்டுக்குள் காணப்படுகிறது.
இருப்பினும் சுகாதார பாதுகாப்பு அறிவிவுத்தல்கள் தொடர்ந்து கடுமையான முறையில் செயற்படுத்தப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.