தேராவிலில் கத்திமுனையில் நகை, பணம் கொள்ளை
முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு காவல்துறை பிரிவுக்குட்பட்ட தேராவில் பகுதியில் கத்திமுனையில் நகை, பணம் என்பன கொள்ளையிடப்பட்டுள்ளன.
நேற்று (04) இரவு 11 மணியளவில் வீட்டினுள் நுழைந்த மூன்று திருடர்கள் இந்தத் துணிகர திருட்டில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், தேராவில் பகுதியில் மூன்று பெண்கள் மாத்திரம் வசித்துவரும் வீட்டின் கூரையை பிரித்து நேற்று (04) இரவு 11 மணியளவில் வீட்டினுள் நுழைந்த மூன்று திருடர்கள், வீட்டில் இருந்த தாய், மகள், தாயின் தாய் ஆகிய மூவரின் கண்கள், கைகளை கட்டிவிட்டு வீட்டில் சல்லடை போட்டுத் தேடி 90000 ரூபாவுக்கு மேற்பட்ட பணத்தினை கொள்ளையடித்துள்ளனர்.
கொலை மிரட்டல்
அத்தோடு மகளின் கழுத்தில் கத்தியை வைத்து மகளை கொலை செய்யப்போவதாக மிரட்டி நகைகளைக் கோரி அவர்களிடம் இருந்த சுமார் ஆறு பவுணுக்கு மேற்பட்ட நகைகளையும் கொள்ளையடித்து அவர்களின் மோட்டார் சைக்கிள் ஒன்றையும் எடுத்துச் சென்றுள்ளனர்.

நேற்று (04) இரவு 11 மணியளவில் வீட்டில் நுழைந்த குறித்த திருடர்கள் இன்று(05) அதிகாலை 3 மணிக்கு பின்னரே வீட்டை விட்டுச் சென்றதாகவும் தமது கடையில் இருந்த சிகரெட்களை எடுத்து வந்து தமக்கு முன்னால் புகைத்து கடையில் இருந்த சோடாவை எடுத்து குடித்து தமக்கும் பருக்கி தம்மை கெட்ட வார்த்தைகளால் பேசி பல்வேறு அட்டகாசம் புரிந்து சென்றதாகவும் குறித்த தாய் கண்ணீருடன் தெரிவித்தார்.
முன்னைய காலத்தில் நாம் எந்தப் பயமும் இன்றி வாழ்ந்தோம். ஆனால் இன்று நிம்மதியாக வாழ முடியாத நிலைக்குள் தள்ளப்பட்டுள்ளோம்.
விசாரணை
எம்மிடம் “காவல்துறைக்கோ ஊடகங்களுக்கோ தகவல் வழங்க கூடாது எனவும் மீறிக் கூறினால் மூவரையும் வந்து கொலை செய்வோம்” எனவும் மிரட்டிச் சென்றதாக அவர் கூறுகிறார்.

இந்த நிலையில் இன்று(5) புதுக்குடியிருப்பு காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில், காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
முகமாலை நவீன போரியல் விதிகளை மாற்றியமைத்த ஈழத்து ஸ்டாலின்கிராட் 8 நிமிடங்கள் முன்