தென் கொரியாவில் கல்வியுடன் வேலை வாய்ப்பு! அரசாங்கத்தின் புதிய திட்டம்
தொழிலாளர் அமைச்சகத்தின் கீழ் செயல்படும் தேசிய தொழில் பாதுகாப்பு மற்றும் சுகாதார நிறுவனத்தின் (NIOSH) அதிகார வரம்புகள் தொடர்பான படிப்புகளைப் பயிலும் மாணவர்களை, உயர்கல்விக்காக தென் கொரியாவில் உள்ள சாங்ஷின் பல்கலைக்கழகத்திற்கு அனுப்பும் திட்டம் ஒன்று அரசாங்கத்தால் தொடங்கப்பட்டுள்ளது.
அதன்படி, தேசிய தொழில் பாதுகாப்பு மற்றும் சுகாதார நிறுவனத்தின் அதிகாரிகளுக்கும் பல்கலைக்கழகப் பிரதிநிதிகளுக்கும் இடையேயான ஒரு சிறப்புக் கூட்டம் சமீபத்தில் தொழிலாளர் அமைச்சகத்தில் நடைபெற்றது.
கடந்த ஆண்டு சாங்ஷின் பல்கலைக்கழகம் இலங்கை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகமாக அறிவிக்கப்பட்டது.
சாங்ஷிங் பல்கலைக்கழகம்
இந்தத் திட்டத்தின் கீழ், தேசிய தொழில் பாதுகாப்பு மற்றும் சுகாதார நிறுவனத்தில் (NIOSH) பயிலும் மாணவர்கள், சாங்ஷிங் பல்கலைக்கழகத்தில் மிகவும் குறைந்த கட்டணத்தில் பட்டப்படிப்பு வரை உயர்கல்வியைத் தொடரலாம்.

மேலும், படிக்கும்போதே பகுதிநேர வேலை செய்யும் வாய்ப்பையும் பெறுகின்றனர்.
இந்தத் திட்டத்தின் ஒரு சிறப்பு அம்சமாக மாணவர்கள் பாடக் கட்டணத்தில் 50% மட்டும் செலுத்தினால் போதும் என்றும் அதே சமயம் கல்வித் திறமையில் சிறந்து விளங்கும் மாணவர்களுக்கு 100% வரை பாடக் கட்டணம் தள்ளுபடி செய்யப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.
பட்டப்படிப்பை முடிக்கும் மாணவர்களுக்கு தென் கொரியாவில் நிரந்தர வேலைவாய்ப்பைப் பெறும் வாய்ப்பும் உள்ளது.
இந்தக் கலந்துரையாடலின் போது, இரு நாடுகளுக்கும் இடையே இந்தத் திட்டத்தை விரிவுபடுத்துவதற்கும், இந்தப் பாடத்திட்டத்தில் அதிக மாணவர்களைச் சேர்ப்பதற்கும் எடுக்கப்படக்கூடிய நடவடிக்கைகள் குறித்து இரு தரப்புப் பிரதிநிதிகளும் ஆழமாக விவாதித்தனர்.
கூட்டத்தில் கலந்துகொண்ட தொழிலாளர் பிரதி அமைச்சர் மஹிந்த ஜெயசிங்க, இத்திட்டத்தை நடைமுறைப்படுத்த அரசாங்கம் தலையிட்டு முழுவீச்சில் செயல்படும் என்று தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |