ஜனாதிபதி அநுரவுடன் ஜூலி சங் இறுதி சந்திப்பு
இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவராக தனது இராஜதந்திர சேவையை நிறைவு செய்துவிட்டு, ஜனவரி 16ஆம் திகதி புறப்படவுள்ள ஜூலி சங் (Julie Chung) ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவைச் சந்தித்துள்ளார்.
குறித்த சந்திப்பானது, ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று(12) இடம்பெற்றதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
அதன்போது, ஜூலி சங் தனது பதவிக்காலத்தில் அமெரிக்காவிற்கும் இலங்கைக்கும் இடையிலான உறவை வலுப்படுத்துவதற்காக மேற்கொண்ட தொடர்ச்சியான முயற்சிகளை ஜனாதிபதி பாராட்டியுள்ளார்.
விசேட ஆதரவுகள்
அத்துடன், 'டித்வா' (Ditwa) சூறாவளியினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு துரிதமாக நிவாரணங்களை வழங்குவதற்காக அமெரிக்காவுடன் இணைந்து அவர் ஆற்றிய பங்களிப்பிற்கு ஜனாதிபதி தனது நன்றியையும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, சர்வதேச நாணய நிதியத்துடனான (IMF) பேச்சுவார்த்தைகளின் போது அவர் வழங்கிய விசேட ஆதரவிற்கும் ஜனாதிபதி பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்.
2022 பெப்ரவரி மாதம் இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவராகப் பதவியேற்ற ஜூலி சங், அமெரிக்கா மற்றும் இலங்கைக்கு இடையிலான இராஜதந்திர உறவுகளின் 75-வது ஆண்டு நிறைவு உட்பட, இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளின் பல முக்கிய மைல்கற்களில் தனது தலைமைத்துவத்தை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |