ஈ.பி.டி.பியின் ஆதரவுடன் அதிகாரத்தைக் கைப்பற்றிய சுயேட்சைக் குழு!
காரைநகர் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் இதய நோய் தாக்கத்தினால் உயிரிழந்துள்ள நிலையில் காரைநகர் பிரதேச சபை தவிசாளர் பதவி வெற்றிடமாக காணப்பட்டது.
இன்றைய தினம் காரைநகர் பிரதேச சபை தவிசாளர் தெரிவுக்கான விசேட அமர்வு உள்ளூராட்சி ஆணையாளர் பற்றிக் நிரஞ்சன் தலைமையில் இடம்பெற்றது. குறித்த அமர்வின் போது தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் காரைநகர் பிரதேச சபை உப தவிசாளர் பாலச்சந்திரன் போட்டியிட இருந்த போதிலும் அவருக்கு ஏனைய கட்சிகள் ஆதரவு அளிக்காத நிலையில் சுயேச்சை குழு கட்சியை சேர்ந்த ஒருவர் தவிசாளர் பதவிக்கு போட்டியிட்டிருந்தார்.
இந்நிலையில், ஈ.பி.டி.பி கட்சியின் ஆதரவுடன் சுயேட்சை குழு உறுப்பினர் அப்புத்துரை வெற்றியீட்டியுள்ளார். இன்றைய தவிசாளர் தெரிவு விசேட அமர்வில் ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்துள்ளதோடு தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் நடுநிலை வகித்துள்ளனர்.
காரைநகர் பிரதேச சபையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் மூன்று உறுப்பினர்களும் சுயேட்சை குழுவில் மூன்று உறுப்பினர்களும் ஐக்கிய தேசியக் கட்சியில் இரண்டு உறுப்பினர்களும், ஈ.பி. டி பியில் இருவரும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியில் ஒருவரும் உள்ள நிலையில் ஈ.பி.டி.பியின் ஆதரவுடன் சுயேட்ச்சை குழுவானது தவிசாளர் பதவியினை கைப்பற்றியுள்ளது.

