பழியை எம் மீது போடாதீர் - சிறிலங்கா அரசாங்கம் மன்றாட்டம்
திருகோணமலை மாவட்டத்தின் கிண்ணியா ஆற்றில் ஏற்பட்ட படகு விபத்தை அரசியலாக்கி, அரசாங்கம் மீது பழி போடுவதற்கு மேற்கொள்ளப்படும் முயற்சிகளை கண்டிப்பதாக நெடுஞ்சாலைகள் அமைச்சர் ஜோன்சன் பெர்னாண்டோ (Johnston Fernando) தெரிவித்துள்ளார்.
விபத்துக்கு காரணமான படகுப் பாதை சேவையை முன்னெடுப்பதற்கு சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ்சின் ஆளுகைக்கு உட்பட்ட கிண்ணியா நகர சபையே அனுமதி வழங்கியதாக ரிஷாட் பதியூதீன் மற்றும் இம்ரான் மஹ்ரூப் ஆகியோர் முன்வைத்த கருத்துக்களுக்கு பதில் அளித்து உரையாற்றிய போது அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தொடரந்தும் பதிலளித்த அவர், “எனக்குத் தெரிந்தவரை , ஆற்றில் ஏற்பட்ட விபத்து தொடர்பில் எம்மீது பழிபோட எத்தனிக்கின்றனர்.
இந்தப் பாலத்திற்கு கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்திலேயே அடிக்கல் நாட்டப்பட்டது. மதிப்பீடு செய்யாமல், விலைமனுக் கோராமல், எதனையும் செய்யாமல் அடிக்கல் நாட்டியுள்ளனர்.
எமது அரசாங்கம் வந்த பின்னர் மதிப்பீடு செய்து, விலைமனுக் கோரப்பட்டு, பாலத்தின் ஒரு பகுதியை அப்பகுதி மக்களின் பயன்பாட்டிற்காக விரைவாக வழங்குவதற்கு எதிர்பார்கின்றோம்.
பாலத்தை நிர்மாணிக்கும் போது, மாற்று பாதையொன்று ஏற்படுத்தப்படவில்லை தொடர்பிலேயே இங்கு பிரச்சினை முன்வைக்கப்பட்டுள்ளது. எனினும் இந்த மாற்றுப் பாதை சற்று தூரமானது, மூன்று கிலோமீற்றர் நீளம் கொண்டது. அதனைப் பயன்படுத்துவதற்கு மக்கள் விரும்பவில்லை. அதுவே எனக்கு கிடைத்த தகவல்.
இந்தப் படகுப்பாதை சேவையை நகர சபையே மேற்கொண்டுள்ளது. கிண்ணியா நகர சபையின் தலைவரே இதற்கான அனுமதியை வழங்கியுள்ளார்.
இலங்கை முஸ்லிம் காங்கிரஸ்சே இதற்கான அனுமதியை வழங்கியுள்ளது. இந்தப் படகுப்பாதையை நாங்கள் வழங்கினோம் என எம்மீது பழி போட வேண்டாம். இதற்கான அனுமதியை உள்ளூராட்சி நிறுவனமே வழங்கியுள்ளது” என்றார்.