குறைக்கப்பட்ட வாகனங்களுக்கான லீசிங் வசதி! இறக்குமதியாளர்கள் சங்கம் அதிருப்தி
மத்திய வங்கியினால் வாகனங்களுக்கான லீசிங் வசதி திடீரென 50 சதவீதத்திலிருந்து 40 சதவீதமாகக் குறைக்கப்பட்டிருப்பது, முறையாக வரி செலுத்தி வாகனங்களை இறக்குமதி செய்துள்ள வர்த்தகர்களைப் பாரிய நெருக்கடிக்குள் தள்ளியுள்ளதாக இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
அரசாங்கத்திற்குப் பாரிய வருமானத்தை ஈட்டித் தரும் இத்துறையை நம்பி சுமார் 30 முதல் 40 இலட்சம் மக்களின் வாழ்வாதாரம் தங்கியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்தத் திடீர் சுற்றறிக்கையினால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்துக் கலந்துரையாடுவதற்கு மத்திய வங்கி ஆளுநர் மற்றும் நிதியமைச்சின் அதிகாரிகளுடன் அவசர சந்திப்பொன்றை வழங்குமாறு அரசாங்கத்திடம் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
40 சதவீதமாகக் குறைப்பு
இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,

“ஒரு சாதாரண மனிதன் வாகனம் வாங்கும்போது இதுவரை வழங்கப்பட்டு வந்த 50 சதவீத லீசிங் வசதி, திடீரென 40 சதவீதமாகக் குறைக்கப்பட்டிருக்கிறது.
வாகனத் துறை என்பது அரசாங்கத்திற்குப் பாரிய வருமானத்தை ஈட்டித் தரும் ஒரு துறையாகும். இதில் நேரடியாகவும் மறைமுகமாகவும் இலட்சக்கணக்கான மக்கள் தங்கியுள்ளனர்.
தற்போது வந்துள்ள வாகனங்கள் அனைத்தும் அரசாங்கத்துக்கு செலுத்த வேண்டிய அனைத்து வரிகளையும் செலுத்திய பின்னரே நாட்டுக்குள் வந்துள்ளன.
அவ்வாறு வரிகளைச் செலுத்தி கொண்டு வரப்பட்ட வாகனங்களை விற்பனை செய்வதற்கான வாய்ப்பை இந்தத் திடீர் முடிவு தடுத்துள்ளது. தனிப்பட்ட இறக்குமதியாளர்களுக்குச் சலுகை வழங்கிவிட்டு, முறையாகத் தொழில் ரீதியாக இறக்குமதி செய்து அரசாங்கத்துக்கு வரி செலுத்துபவர்களுக்கு 40 சதவீதமாகக் குறைத்திருப்பது பாரிய அநீதியாகும்” என கூறியுள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |