தொல்லை தரும் தொலைப்பேசி அழைப்புகள்! காவல்துறையினர் விடுத்துள்ள கடும் எச்சரிக்கை
நாட்டில் தொலைபேசி அழைப்புகள் மற்றும் குறுஞ்செய்திகள் மூலம் பொதுமக்களை தொடர்ந்து தொந்தரவு செய்யும் நபர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என காவல்துறையினர் எச்சரித்துள்ளனர்.
இந்த விடயத்தை, கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவின் பொறுப்பதிகாரியும் சட்டத்தரணியுமான திலன் குமார தெரிவித்துள்ளார்.
அதன்படி, 2024 ஆம் ஆண்டின் 39 ஆம் இலக்க இலங்கைத் தொலைத்தொடர்பு (திருத்தப்பட்ட) சட்டத்தின் 32 ஆம் பிரிவின் கீழ், நியாயமான காரணமின்றி ஒருவரைத் துன்புறுத்தும் அல்லது குழப்பமடையச் செய்யும் நோக்கில் தொடர்ந்து தொலைபேசி அழைப்புகளை மேற்கொள்வதும், குறுஞ்செய்திகளை அனுப்புவதும் தண்டணைக்குரியவை எனவும் அவர் எச்சரித்துள்ளார்.
அபராதத் தொகையை செலுத்தத் தவறினால் சிறைத்தண்டனை
மேலும், தனிப்பட்ட நபர்களின் தொலைபேசி இலக்கங்களை அவர்களது அனுமதியின்றி சமூக ஊடகங்களில் பகிர்வது மற்றும் தவறான தகவல்கள் பரப்புவதும் இந்த சட்டத்தின் கீழ் தண்டனைக்குரிய குற்றமெனவும் திலன் குமார தெரிவித்துள்ளார்.

இந்தக் குற்றங்களில் குற்றவாளியாக நிரூபிக்கப்பட்டவர்களுக்கு அதிகபட்சமாக 1 இலட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படலாம். அவ்வாறு அபராதத் தொகையை செலுத்தத் தவறினால், 6 மாதங்கள் வரை சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டி இருக்கும் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.
மேலும், குற்றச்செயலுக்கு பயன்படுத்தப்பட்ட தொலைபேசி இணைப்பை துண்டிக்கும் அதிகாரமும் அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது எனவும் திலன் குமார தெரிவித்துள்ளார்.
குறித்த சட்டம், தொல்லைகளுக்கு உள்ளாகும் நபர்களுக்கு முக்கியமான பாதுகாப்பு கருவியாக இருக்கும் என காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.
இத்தகைய தொல்லைகளுக்கு உள்ளாகும் பொதுமக்கள், குற்றப் புலனாய்வுத் திணைக்களம் அல்லது தமக்கு அருகிலுள்ள காவல் நிலையத்தில் முறைப்பாடுகளை பதிவு செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |