பாதாள உலகக் குழுவுடன் தொடர்பு : விஜயதாசவின் மகன் உள்ளிட்ட மூவருக்கும் விளக்கமறியல் நீடிப்பு
புதிய இணைப்பு
முன்னாள் நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்சவின் மகனான சட்டத்தரணி ரகித ராஜபக்ச, ஐக்கிய மக்கள் சக்தியின் முன்னாள் ஹொரணை தொகுதி அமைப்பாளராகச் செயற்பட்ட சரித் அபேசிங்க மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அதிகார சபையின் முன்னாள் பணிப்பாளர்களில் ஒருவரான அருண வருணஹெந்திகே ஆகிய மூவரையும் மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
இன்று (17) காலை மூவரும் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில் மூன்று சந்தேகநபர்களையும் எதிர்வரும் 28ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.

முதலாம் இணைப்பு
இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்சவின் மகன் உள்ளிட்ட மூவரும் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.
விஜயதாச ராஜபக்சவின் புதல்வரான சட்டத்தரணி ரகித ராஜபக்ச, ஐக்கிய மக்கள் சக்தியின் முன்னாள் ஹொரணை தொகுதி அமைப்பாளராகச் செயற்பட்ட சரித் அபேசிங்க மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அதிகார சபையின் முன்னாள் பணிப்பாளர்களில் ஒருவரான அருண வருணஹெந்திகே ஆகிய மூவருமே சற்று நேரத்திற்கு முன்னர் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான 'ஹரக் கட்டா என்ற நதுன் சிந்தக விக்ரமரத்னவின் மனைவியிடமிருந்து குறித்த சந்தேகநபர்கள் 1,200 இலட்சம் ரூபாவை இலஞ்சம் பெற்றதாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
நீதிமன்றத்தில் முன்னிலை
பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள ஹரக் கட்டாவை பாதுகாப்பதாகவும், அவரை சாதாரண விளக்கமறியலில் வைப்பதாகவும் குறிப்பிட்டு இவர்கள் ஹரக் கட்டாவின் மனைவியிடம் இலஞ்சம் பெற்றதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த சம்பவத்துடன் தொடர்புடையதாக வெளியான குரல் பதிவுகள் கசிந்தமையை அடுத்து சந்தேகநபர்கள் இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் கடந்த மாதம் 25ஆம் திகதி கைது செய்யப்பட்டு ஜூலை மாதம் 3ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.
இதனைத் தொடர்ந்து சந்தேகநபர்களை ஜூலை மாதம் 3ஆம் திகதி கொழும்பு தலைமை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது இன்று (17) வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டது.
இந்த நிலையில் குறித்த சந்தேகநபர்கள் மூவரும் இன்று இரண்டாவது முறையாக நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |