உருவானது குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி! மக்களுக்கு வெளியான முன்னறிவிப்பு
இலங்கையின் தென்கிழக்கே தெற்கு வங்காள விரிகுடாவின் மத்திய கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன் விளைவாக, இந்தக் கடல் பகுதியில் பலத்த மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
கடல் பகுதிகள் கொந்தளிப்பாகவோ அல்லது மிகவும் கொந்தளிப்பாகவோ இருக்கலாம் என்பதால், வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிடும் எதிர்கால முன்னறிவிப்புகள் மற்றும் ஆலோசனைகளுக்கு மீனவர்கள் மற்றும் கடற்படை சமூகத்தினர் கவனம் செலுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
சூறாவளி
எனினும், இந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை வரும் வாரத்தில் சூறாவளியாக உருவாக வாய்ப்பில்லை என்றும் எதிர்வு கூறப்பட்டுள்ளது.

இதேவேளை, இன்று (16) இரவு மேற்கு மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாளை (17) முதல் வரும் நாட்களில் வடக்கு, வடமத்திய, மத்திய, ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களில் மழை நிலைமை அதிகரிக்கும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
மழை நிலைமை
வடக்கு, வடமத்திய, மத்திய, ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களிலும், ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய, ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் பொலன்னறுவை மாவட்டத்திலும் சில இடங்களில் 100 மி.மீற்றருக்கும் அதிகமான கனமழை பெய்யக்கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.
மற்றைய பகுதிகளில், பிற்பகல் 1.00 மணிக்குப் பிறகு மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும், சில இடங்களில் சுமார் 75 மி.மீற்றர் வரையிலான ஓரளவு கனமழை பெய்யக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |