சிறிலங்கா பொதுஜன பெரமுனவுக்கு அதிர்ச்சி கொடுத்த நீதிமன்றம்
சிறிலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் உறுப்பினர் ஒருவர் மொனராகலை பிரதேச சபை உறுப்பினர் பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
உயர் நீதிமன்ற நீதிபதி ரங்க திஸாநாயக்கவின் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பின் ஊடாக இந்த விடயம் இடம்பெற்றுள்ளது.
2018ஆம் ஆண்டு உள்ளூராட்சி மன்றத் தேர்தலில், மொனராகலை பிரதேச சபைக்கு சிறிலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஊடாக தெரிவான டி.எம் ஹர்ஷக பிரிய திஸாநாயக்க, தேர்தலில் வாக்களிப்பதற்காக வாக்காளர்களுக்கு இலஞ்சம் கொடுத்தமை நிரூபிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளர் வனசிங் முதியன்சலாகே சாந்தவினால் தன்னை எதிர்த்து போட்டியிட்ட வேட்பாளர் ஒருவர் வழங்கிய இலஞ்சம் காரணமாக தனக்கு நட்டம் ஏற்பட்டதாக உயர் நீதிமன்றில் மனு தாக்கல் செய்திருந்தார்.
ஹர்ஷக பிரிய திஸாநாயக்க என்ற வேட்பாளர் மின்சாரம் மற்றும் நீர் இணைப்புகளுக்கு பணம் கொடுத்துள்ளதோடு, உலர் உணவுகளை விநியோகித்துள்ளதோடு, தேர்தலில் வாக்காளர்களுக்கு வாக்களிக்குமாறு மதுபானங்களையும் விநியோகித்துள்ளார்.
மனுதாரர் தனது வழக்கின் சாட்சியாக தகவல் அறியும் உரிமை ஊடாக உரிய ஆதாரங்களைப் பெற்றுள்ளதோடு, இலஞ்சம் கொடுக்கப்பட்ட பலரும் சாட்சிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.
இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட உயர் நீதிமன்ற நீதிபதி ரங்க திசாநாயக்க, குறித்த பொதுஜன பெரமுன உறுப்பினர், பல்வேறு வகையான இலஞ்சங்களை வழங்கியிருப்பது நிரூபிக்கப்பட்டுள்ளதாக அறிவித்தார்.
இதற்கமைய குறித்த நபர் மொனராகலை பிரதேச சபை உறுப்பினர் பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக நீதிபதி அறிவித்துள்ளார். மேலும், ஹர்ஷக பிரிய திஸாநாயக்கவிற்கு இந்த வழக்கில் மேன்முறையீடு செய்ய ஆறு வாரகால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், சுதந்திரமானதும் நியாயமானதுமான தேர்தலுக்கான மக்கள் செயற்பாடான, பெப்ரல் நீதிமன்றத் தீர்ப்பை பாராட்டியுள்ளது.
நீதிமன்றத் தீர்ப்பு, எதிர்காலத் தேர்தலில் வாக்காளர்களுக்கு இலஞ்சம் கொடுத்தால் ஆசனத்தை இழக்க வேண்டிய நிலை ஏற்படும் என்ற விடயத்தை நினைவூட்டியுள்ளதாக, பெப்ரல் அமைப்பின் நிர்வாக பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.