புதுமாத்தளன் சந்தியில் விடுதலைப்புலிகளின் முன்னரங்க தடயம்
தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் நினைவுகளை மீட்டெடுக்கும் தடயங்கள் தாயகத்தில் அழிக்கப்பட்டு வருகின்றன.
எதிர்காலத்தில் விடுதலைப்புலிகளை அடையாளப்படுத்தும் விடுதலைப் போராட்டத்தை அடையாளப்படுத்தும் எந்தவொரு தடயங்களும் தாயகத்தில் இருந்துவிடக்கூடாது என்பதில் இலங்கை அரசு மிகுந்த கவனமெடுத்து வருகின்றது.
இறுதிப் போரின் போது பல இடங்களில் விடுதலைப் புலிகளின் முன்னரங்குகள் வலுவான திட்டமிடல்களோடு அமைக்கப்பட்டு முன்னேறி வந்துகொண்டிருந்த இராணுவத்தினரை இடைமறித்து முறியடிப்புத் தாக்குதல்களை செய்திருந்தனர்.
சில முன்னரங்குகளில் இருந்து எந்த தாக்குதல்களும் இல்லாது கைவிடப்பட்டு பின்வாங்கியிருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
புதுமாத்தளன் முன்னரங்கு
புதுமாத்தளன் புதுக்குடியிருப்பு வீதியினை புதுமாத்தளன் சந்திக்கு அண்மையில் இடைமறித்து அமைக்கப்பட்டிருந்தது இறுதிப் போரின் பாரிய முன்னரங்கு ஒன்று.
அம்பலவன்பொக்கனை, புதுமாத்தளன் மாத்தளன், வலைஞர்மடம், இரட்டைவாய்கால் பகுதிகளினுள் இராணுவம் உள் நுழைவதை தடுக்கும் நோக்கோடு இரட்டைவாய்கால் சந்தி முதல் புதுமாத்தளன் சந்திவரை இந்த முன்னரங்கு நீண்டிருந்தது.
யுத்தம் முடிவடைந்து 14 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில் முன்னரங்குகளில் குவிக்கப்பட்ட மணல் பரவப்பட்டு அரண் அமைப்பதற்காக பயன்படுத்தப்படிருந்த மரக்குற்றிகள் அகற்றப்பட்டு அவை அழிக்கப்பட்டு விட்டன.
பல முன்னரங்குகள் இருந்த இடம் தெரியாதளவுக்கு காணாமல் போயுள்ளதாக முன்னரங்குகள் பற்றி தன் நினைவுகளைப் பகிர்ந்து கொண்டார் புதுமாத்தளனைச் சேர்ந்த வியாபாரி.

புதுமாத்தளன் சந்தியில் இரு பக்கங்களிலும் முன்னரங்க மண் அரண் அழிந்து விடாது இருந்தது. அழியாது மிச்சமாக இருந்த இந்த முன்னரங்கு இரட்டைவாய்கால் பக்கம் நோக்கியதாக மூன்று காவலரண்கள் வரை நீண்டிருந்தது.
மீள் குடியேற்றத்திற்கு பின்னரும் அழிக்கப்படாது நீண்ட நாட்களாக இது இருந்தது. தொடர்ச்சியாக மழை வெய்யிலினால் உயரமாக இருந்த இந்த முன்னரங்கு அழிந்து இப்போது மிச்சமாக இருப்பது இந்த சிறியளவான அரண் மட்டுமே! அரண் அமைப்புக்கு பயன்படுத்தப்பட்டிருந்த மரக்குற்றி ஒன்றும் மண்ணில் புதையுண்டவாறு இருப்பதனையும் அவர் சுட்டிக்காட்டி விபரங்களை குறிப்பிட்டார்.

இந்த முன்னரங்கு பாதுகாக்கப்பட்டு பேணியிருந்திருந்தால் அது ஒரு அழகிய வீரமிகு நினைவாக தொடர்ந்திருக்கும் எனவும் அவர் தன் சிந்தனையையும் பகிர்ந்து கொண்டார். பத்தடி உயரமும் நான்கு மீற்றர் அடி அகலத்தையும் இந்த முன்னரங்கு கொண்டிருந்தது.
இது போலவே தண்ணிமுறிப்பு குளத்திலிருந்து கிழக்கேயும் ஒரு நீண்ட முன்னரங்கு இருந்ததாகவும் அதன் அமைப்புமுறை பிரமிப்பை தமக்கு ஏற்படுத்தியிருந்ததாகவும் தண்ணிமுறிப்பில் வயல் செய்கையில் ஈடுபடும் முள்ளியவளையைச் சேர்ந்த பலர் குறிப்பிட்டு தங்கள் நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்.
போர் நினைவுச் சின்னங்கள்
வடக்கில் உள்ள போர் நினைவுச் சின்னங்கள் போரினால் அழிவுகளை சந்தித்த மக்களுக்கு மனவுளைச்சலை ஏற்படுத்துவதாக இருக்கின்றன என சமூக அக்கறையுள்ளோர் குறிப்பிடுகின்றனர்.
சிங்கள இராணுவத்தினரின் போர் வெற்றி நினைவுச் சின்னங்கள் தமிழர் மனங்களில் தொடர்ந்து பாதிப்பை ஏற்படுத்தியவாறு இருப்பதனை கருத்தில் கொண்டு அவற்றை அகற்றுவது தான் சாலப் பொருத்தமாக இருக்கும்.

சிங்களப் பகுதிகளில் இல்லாத நினைவுச் சின்னங்கள் தமிழர் தாயகப்பகுதிகளில் மட்டும் தொடர்ந்து இருப்பதும் சிங்கள அரசின் தமிழர்கள் மீதான ஒரு உளவியல் போர்முறையாக இருக்கலாமோ என்ற அச்சம் தமக்கிருப்பதாக கூறுகின்றனர்.
ஜே.வி.பி யின் ஆயுத கிளர்ச்சியை அடக்கிய போது ஆயிரக்கணக்கான படித்த சிங்கள இளைஞர்கள் கொல்லப்பட்டு அந்த கிளர்ச்சி அடக்கி ஒடுக்கப்பட்டிருந்தது. அதன் போதும் கிளர்ச்சியை அடக்கி ஒடுக்க இராணுவமும் காவல்துறையினருமே பயன்படுத்தப்பட்டிருந்தனர்.
அந்த கிளர்ச்சியை அடக்கிய வெற்றியை நினைவு கொள்ளும் வகையில் அதிகளவான நினைவுச் சின்னங்கள் தெற்கில் இல்லாதிருப்பதையும் நோக்க வேண்டும் என சுட்டிக் காட்டியிருந்தனர்.
தமிழர்கள் மீதான உளவியல் போர்
தாயகப்பரப்பில் மிகப்பெரிய நினைவாக தமிழர் மனங்களில் அழியாத இடம் பிடித்துள்ள மாவீரர் துயிலுமில்லங்களை அழித்தொழித்து அதன் மீது முகாமிட்டுள்ள இராணுவம் இராணுவ வெற்றிச் சின்னங்களை நிலைநிறுத்தி பாதுகாத்து வருகின்றது.
தமிழர்கள் உளவியல் அடிப்படையில் பாதிப்புக்குள்ளாகும் போது அவர்களின் போராடும் திறன் பலவீனமடைவதோடு பொருளாதார இழப்புக்களையும் சந்திக்க வழிசமைத்து விடும்.

தமிழர்கள் இது தொடர்பில் கவனம் செலுத்தி தங்கள் விடுதலைப்போரில் நியாயப்பாடுகளை புரியவைத்து நினைவுகளை மீட்டெடுக்கும் வகையில் செயற்படுவது தான் நாளைய இளம் தமிழ்ச் சமூகத்திற்கு நல்லதாக அமையும் என நினைவுச் சின்னங்களும் உளவியல் தாக்கமும் என்ற தொனிப்பொருளில் எங்கள் கேள்விக்கு பதிலளிக்கும் போது பிரபல பாடசாலை ஒன்றில் கடமையாற்றும் உளவியலில் பட்டம் பெற்ற ஆசிரியர் ஒருவர் தன் கருத்துக்களையும் பகிர்ந்து கொண்டார்.
இன்று வடக்கு கிழக்கு முழுவதும் தமிழர்கள் மீது உளவியல் போர்முறையில் செயற்றிட்டங்களை இலங்கை அரசு முன்னெடுத்து வருகின்றது.இதனை அவதானித்து விழிப்படைந்து அதற்கெதிராகவும் தமிழர்கள் தங்கள் எதிர்வினையாற்றலை முன்னெடுக்க வேண்டும் என்றும் மேலும் குறிப்பிட்டார்.
பொறுப்பு துறப்பு!
இக்கட்டுரையானது பொது எழுத்தாளர் Uky(ஊகி) அவரால் எழுதப்பட்டு, 02 December, 2023 அன்று ஐபிசி தமிழ் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது. இக்கட்டுரைக்கும் ஐபிசி தமிழ் தளத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.
அன்னை பூபதி! ஈழ நிலத்தின் அன்னையர்களின் குறியீடு
5 நாட்கள் முன்