பொய் சொல்வது பசில் ராஜபக்சவா அல்லது அஜித் நிவாட் கப்ராலா?
பசில் ராஜபக்ச சந்திரனுக்கு செல்வதாக கூறினால் அஜித் நிவாட் கப்ரால் சூரியனுக்கு செல்வதாகவே கூறுகிறார் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா (Harsha de Silva) தெரிவித்துள்ளார்.
அதேவேளை, நிதி அமைச்சர் பசில் ராஜபக்சவா அல்லது மத்திய வங்கியின் ஆளுனர் அஜித் நிவாட் கப்ராலா பொய்யுரைப்பது என கேள்வி எழுப்பியுள்ளார்.
கடன் மீள் செலுத்துகை மற்றும் பொருளாதார நிலைமை குறித்து இருவரும் முன்னுக்கு பின் முரணான தகவல்களை வெளியிட்டு வருகின்றனர் எனவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
கடன் மீள் செலுத்துகையை மறுசீரமைப்பது குறித்து சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து ஆலோசனை பெற்றுக்கொள்ளப்பட உள்ளதாகவும், நிபுணத்துவ ஆலோசனைகளை வழங்க உறுதியளித்துள்ளதாகவும் பசில் ராஜபக்ச கூறியிருந்தார் என ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.
எனினும், சர்வதேச நாணய நிதியத்தின் நிபுணர்கள் தொழில்நுட்ப பயிற்சி ஒன்றை வழங்குவதற்காக இலங்கை வருவதாகவும், இந்த பயிற்சிக்காக ஜப்பான் நிதி உதவி வழங்குவதாகவும் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் பற்றிய கடிதம் தமக்கு கிடைக்கப் பெற்றுள்ளதாகவும் அதில் பயிற்சி பற்றியே குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் உதவிகள் பற்றி குறிப்பிடப்படவில்லை எனவும் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.