பிரதமரைச் நேரில் சந்தித்த எதிர்க்கட்சி முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள்!
முஸ்லிம் மக்கள் சார்பாக பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ அவர்களினால் ஆண்டுதோறும் நடத்தப்படும் இப்தார் நிகழ்வு இம்முறை கொரோனா கட்டுப்பாட்டு விதிகளுக்கு அமைய முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலரது பங்கேற்புடன் நேற்று பிற்பகல் அலரி மாளிகையில் நடைபெற்றது.
இஸ்லாமிய மதத் தலைவர்கள் மற்றும் மக்களின் பங்கேற்புடன் மிக பிரமாண்டமாக நடைபெறும் இப்தார் நிகழ்வு இம்முறை கொரோனா தொற்று காரணமாக ஒரு சிலரது பங்கேற்புடன் இடம்பெற்றது.
முஸ்லிம் கட்சிகள் சிலவற்றை பிரதிநிதித்துவப்படுத்தி வருகைத்தந்திருந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் இதன்போது முஸ்லிம் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் பிரதமருக்கு தெளிவுபடுத்தினர்.
முஸ்லிம் காங்கிரஸ், முஸ்லிம் தேசிய கூட்டணி மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரதமரை சந்தித்து நட்பு ரீதியாக கலந்துரையாடியதுடன், இப்தார் நிகழ்விலும் கலந்து கொண்டனர்.
நாடாளுமன்ற உறுப்பினர்கள் முன்வைத்த நாடாளுமன்ற உறுப்பினர்களின் பிரச்சினைகள் தொடர்பில் கௌரவ பிரதமர் விசேட கவனம் செலுத்தினார்.
அலரி மாளிகையில் இப்தார் நிகழ்வில் கலந்து கொள்ள கிடைத்தமை விசேடம்சமாகும் என இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்தனர்.
குறித்த நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர்களான நஸீர் அஹமட், எச்.எம்.எம்.ஹாரிஸ், எஸ்.எம்.எம்.முஷரஃப், அலி சப்ரி ரஹீம், எம்.எஸ்.நவ்ஃபீக், இஷான் ரஹுமான், ஃபைஸல் காசிம் மற்றும் கௌரவ பிரதமரின் இஸ்லாமிய விவகாரங்களுக்கான ஒருங்கிணைப்பு செயலாளர் ஃபர்சான் மன்சூர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

