வெடிக்கும் சர்ச்சை - மீண்டும் வெளிவரும் மகிந்தவின் விஜேராம பூதம்
விஜேராம இல்லத்தை முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச (Mahinda Rajapaksa) ஏன் இன்னமும் ஒப்படைக்கவில்லை என்ற விளக்கத்தை ஊடகப் பேச்சாளர் மனோஜ் கமகே வெளியிட்டுள்ளார்.
அரச அதிகாரிகள் மதிப்பீட்டுப் பணிகளை மேற்கொள்ளாத காரணத்தால் தான் இல்லத்தை இன்னும் ஒப்படைக்கவில்லை மனோஜ் கமகே தெரிவித்துள்ளார்.
விஜேராம அரச உத்தியோகபூர்வ இல்லம் தொடர்பில் அமைச்சரவை பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ முன்வைத்த குற்றச்சாட்டு குறித்து ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
உத்தியோகபூர்வமாக கடிதம்
அவர் மேலும் தெரிவித்ததாவது, "முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கொழும்பு - விஜேராம உத்தியோகபூர்வ இல்லத்தை இதுவரையில் அரசுக்கு ஒப்படைக்கவில்லை என்று அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ குறிப்பிட்டுள்ளார்.
அரசு குறிப்பிடும் பொய்களில் இதுவும் ஒன்றாகவே காணப்படுகின்றது. விஜேராம இல்லத்தை ஒப்படைக்குமாறு ஜனாதிபதி செயலகம் 2025.09.24 ஆம் திகதியன்று தான் உத்தியோகபூர்வமாக கடிதம் அனுப்பி வைத்துள்ளது.
நிச்சயிக்கப்பட்ட காலம் ஏதும் அந்த கடிதத்தில் குறிப்பிடப்படவில்லை. இந்த உத்தியோகபூர்வ இல்லத்தில் அரசுக்குச் சொந்தமான சொத்துக்களும், ஜனாதிபதி செயலகம் மற்றும் பிரதமர் அலுவகத்துக்கு சொந்தமான சொத்துக்களும் உள்ளன.
இந்தச் சொத்துக்களை மதிப்பீடு செய்து அடையாளப்படுத்துமாறு பொறுப்பான அரச அதிகாரிகளுக்கு நாங்கள் ஏற்கனவே அறிவுறுத்தியிருந்தோம்.
வீட்டை ஒப்படைக்கவில்லை
அதிகாரிகள் இங்கு வருகைதந்து குறித்த மதிப்பீட்டு நடவடிக்கைகளை மேற்கொள்வதைத் தாமதப்படுத்தியதால்தான் இந்த வீட்டை ஒப்படைக்கவில்லை.
இல்லையென்றால் அமைச்சரவை பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ 'மகிந்த ராஜபக்ச அரசுக்கு சொந்தமான சொத்துக்களை லொறியில் ஏற்றிச் சென்று விட்டார்' என்றும் குறிப்பிடுவார்.
இவ்வாறான பின்னணியில் அரச தகவல் திணைக்களத்தின் அதிகாரிகள் இந்த வீட்டை நேற்று காணொளியாகப் பதிவு செய்துள்ளார்கள்.
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மீது சேறு பூசுவதற்கு ஏதாவதொரு விடயத்தை தேடிக்கொண்டு ஊடகக் கண்காட்சி நடத்துகின்றார்கள் என்றார்.
