முற்றாக வெள்ளத்தில் மூழ்கிய அம்பாறையின் பிரதான வீதிகள்
தற்போது நாட்டில் நிலவிவரும் மழையுடனான காலநிலையால் அம்பாறை மாவட்டம் அதிக பாதிப்புக்குள்ளாகியுள்ளது.
குறிப்பாக நேற்று நள்ளிரவு முதல் பெய்துவரும் கடும் காற்று மற்றும் மழையினால் பிரதான வீதிகள் வெள்ளத்தில் மூழ்கியள்ளன.
குறிப்பாக மாவடிப்பள்ளி தொடக்கம் காரைதீவு வீதி மற்றும், சம்மாந்துறை - அம்பாறை வீதிகள் இவ்வாறு வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
சம்மாந்துறை கல்லரிச்சல் 02 பகுதியில் இரவு வீசிய பலத்த காற்றின் காரணமாக மரம் ஒன்று வீட்டின் மேல் விழுந்து வீடு சேதமடைந்துள்ளது.
மேலும், இன்று சுபஹ் தொழுகைக்குப் பின்னர் ஏற்பட்ட பலத்த காற்றின் காரணமாக, எமது கைர் ஜும்மா பள்ளிவாசலின் பின்புற பிரதான நுழைவாயிலில் உள்ள கண்ணாடி கதவின் பாதி பகுதி கீழே விழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மட்டக்களப்பு
மட்டக்களப்பில் கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் பரவலாக பலத்த மழை பெய்து வருகின்றது. இதனால் தாழ் நிலங்களில் வெள்ள நீர் தேங்கியுள்ளதோடு, உள்ளுர் வீதிளிலும் வெள்ளநீர் வழிந்தோட முடியாமல் தேங்கிக் கிடப்பதையும் அவதானிக்க முடிவதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
அந்த வகையில் மட்டக்களப்பு நகரில் 93.6 மில்லி மீற்றர் மழைவீழ்ச்சியும், நவகிரிப் பகுதியில் 171.2 மில்லி மீற்றர் மழைவீழ்ச்சியும், தும்பங்கேணிப் பகுதியில் 102 மில்லி மீற்றர் மழைவீழ்ச்சியும், உன்னிச்சைப் பகுதியில் 143 மில்லி மீற்றர் மழைவீழ்ச்சியும், உறுகாமம் பகுதியில் 133.3 மில்லி மீற்றர் மழைவீழ்ச்சியும், வாகனேரிப் பகுதியில் 44.3 மில்லி மீற்றர் மழைவீழ்ச்சியும், கட்டுமுறிவு பகுதியில் 34 மில்லி மீற்றர் மழைவீழ்ச்சியும், புதன்கிழமை (26.11.2025) காலை 8.30 மணியுடன் கடந்த 24 மணித்தியாலங்களில் பதிவாகியுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட வானிலை அவதான நிலையக் காரியலயம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் களுதாவளை, களுவாஞ்சிகுடி, வெல்லாவெளி, பழுகாமம், பட்டிப்பளை, வவுணதீவு, உள்ளிட்டபல பகுதிகளிலும் அமைந்துள்ள சிறு குளங்களின் நீர்மட்டங்களும் வெகுவாக உயர்ந்துள்ளன.

எனினும் மாவட்டத்திலுள்ள மிகப் பிரதான குளங்களின் நீர் மட்டமும் உயர்ந்துள்ளன. அந்த வகையில் நவகிரிக் குளத்தின் நீர்மட்டம் 22.4 அங்குலம் உயர்ந்துள்ளதோடு அக்குளத்தில் 3 அடி உயரத்தில் 2 வான்கதவுகள் திறக்கப்பட்டள்ளன. தும்பங்கேணிக்குளத்தின் நீர்மட்டம் 10 அடி, உன்னிச்சைக் குளத்தின் நீர்மட்டம 20 அடி, வாகனேரிக் குளத்தின் நீர்மட்டம் 15 அடி, உறுகாமம் குளத்தின் நீர்மட்டம் 12 அடி உயர்ந்துள்ள இந்நிலையில் அக்குளத்தின் 2 வான்கதவுகள் திறக்கப்பட்டுள்தோடு, புணாணை அணைக்கட்டின் 6 வான் கதவுகளும் திறக்கப்பட்டுள்ளதாக அக்குளங்களுக்குப் பொறுப்பான நீர்ப்பாசனப் பொறியியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இது இவ்வாறு இருக்க மட்டக்களப்பு மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள மேட்டுநிலப் பயிற் செய்கைகளிலும், மழைநீர் தேங்கியுள்ளதனால் தமது பயிற் செய்கையும் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
நாட்டின் பல பகுதிகளில் பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக உருவான வளிமண்டலத் தளம்பல் நிலையானது, ஒரு குறைந்த அழுத்தப் பிரதேசமாக வலுவடைந்துள்ளது.
இது அடுத்த 24 மணித்தியாலங்களில் மேலும் வலுவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் தாக்கம் காரணமாக நாட்டில் தற்போது நிலவும் மழை மற்றும் காற்று நிலைமை அடுத்த சில நாட்களில் மேலும் அதிகரிக்கும். குறிப்பாக கிழக்கு, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களுக்கும் பொலன்னறுவை மாவட்டத்திற்கும் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.



காற்றுடன் கூடிய கனமழை
தற்போது பெய்து வரும் காற்றுடன் கூடிய கனமழை காரணமாக திருகோணமலை மாவட்ட தம்பலகாம பிரதேச செயல பிரிவில் உள்ள தாழ் நிலப் பகுதிகளும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
இதனால் இன்று (26)குறித்த பகுதிக்கு தம்பலகாமம் பிரதேச செயலாளர் ஜெ.ஸ்ரீபதி ,தம்பலகாமம் பிரதேச சபை தவிசாளர் எச்.தாலிப் அலி உள்ளிட்டோர் விஜயம் மேற்கொண்டு நீரில் மூழ்கியுள்ள மற்றும் போக்குவரத்துக்கு தடையான வீதிகள் தொடர்பிலும் உடனடியாக நீரை வெளியேற்ற நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
இதனால் முள்ளிப்பொத்தானை பாதிமா பாலிகா பாடசாலை வீதி, 4ம் வாய்க்கால் வீதி, பாலம் போட்டாறு, புதுக்குடியிருப்பு உள்ளிட்ட பகுதிகளை பார்வையிட்டனர்.
கனமழை தொடர்ந்தும் பெய்து வருவதால் பாடசாலை செல்லும் மாணவர்கள் பெரும் அசௌகரியத்தை குறித்த வீதியின் ஊடாக செல்வதன் ஊடாக எதிர் நோக்கினர்.


செய்தி - ரொஷான்
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |