மைத்திரி தலைமையில் அரசுக்கு எதிராக புதிய கூட்டு? கொழும்பில் அவசர சந்திப்பு
ஆளும் பொதுஜன பெரமுனவில் அங்கம் வகிக்கும் சிறிலங்கா சுதந்திரக்கட்சி உள்ளிட்ட முக்கிய தலைகள் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் முக்கிய கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் குறித்த கலந்துரையாடல் இடம்பெற்றது. அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் அமைச்சர் விமல் வீரவன்ச, அமைச்சர் உதயகம்மன்பில மற்றும் டியூ குணசேகர ஆகியோர் இதில் கலந்துகொண்டிருந்தனர்.
தற்போதைய அரசியல் நிலைவரம் மற்றும் மே தினம் தொடர்பில் இதன்போது பேசப்பட்டதாக கலந்துகொண்ட அமைச்சர்கள் தெரிவித்திருந்தனர்.
இந்த கலந்துரையாடலில் 11 கட்சிகளைச் சேர்ந்த 11 தலைவர்களும் கலந்துகொண்டதாக அமைச்சர் உதய கம்மன்பில குறிப்பிட்டார். அத்துடன் தற்போதைய அரசியல் நிலைவரம் தொடர்பிலும் பேசினோம் என்றார்.
மாகாண சபை சட்ட வரைபு தொடர்பில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உள்ளிட்ட பல கட்சிகள் இணைந்து கலந்துரையாடியதாக நிமால் சிறிபால டிசில்வா தெரிவித்தார்.
வேறு எந்தவித பயணத்தையும் நாம் மேற்கொள்ளவில்லை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி என்ற அடிப்படையில் இந்த கலந்துரையாடல் இடம்பெற்றதாக தெரிவித்தார்.