தையிட்டி பவானி வீதி மீட்பு விவகாரம்...! விதிக்கப்பட்டுள்ள உத்தரவு
தையிட்டியில் சட்டவிரோத விகாரை அமைந்துள்ள காணிக்குள் கையகப்படுத்தப்பட்டுள்ள பிரதேச சபைக்குச் சொந்தமான வீதியினை மீட்கும் நடவடிக்கையைப் பிரதேச சபை கைவிட வேண்டும் எனப் பலாலி காவல்துறையினர் மல்லாகம் நீதவான் நீதிமன்றில் தாக்கல் செய்த வழக்கிற்கான கட்டளை எதிர்வரும் மே மாதம் 21ஆம் திகதி வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த விகாரை அமைந்துள்ள பகுதிக்குள் வலி. வடக்கு பிரதேச சபைக்குச் சொந்தமான பவானி வீதி காணப்படுகிறது.
குறித்த வீதியினை விடுவிக்கும் நோக்குடன் கடந்த 28 ஆம் திகதி வீதி அளவீடு செய்யப்பட்டது.
பிரதேச சபை
அதனைத் அடுத்து குறித்த வீதியை மறித்து அடைக்கப்பட்டுள்ள வேலியை விகாராதிபதி அகற்ற வேண்டும் எனவும் தவறும் பட்சத்தில் பிரதேச சபை அந்த வேலியை அகற்றும் என்றும் அவ்வாறு அகற்றும் செலவீனத்தை விகாராதிபதி பிரதேச சபைக்கு வழங்க வேண்டும் எனவும் தவிசாளர் கடிதம் மூலம் விகாராதிபதிக்கு அறிவித்திருந்தார்.
அதனைத் தொடர்ந்து பிரதேச சபை விகாரை வேலியை அடாத்தாக அகற்ற முற்படுவதாகப் பலாலி காவல் நிலையத்தில் விகாராதிபதி முறைப்பாடு செய்திருந்தார்.

முறைப்பாட்டின் பிரகாரம் தவிசாளரைப் பலாலி காவல்துறையினர் அழைத்து வேலியை அகற்றினால் இனங்களுக்கு இடையில் பிரச்சனைகள் ஏற்பட்டு நல்லிணக்கத்திற்குப் பாதிப்பு ஏற்படும் என்றும் எனவே வேலியை அகற்றும் பணிகளைக் கைவிட வேண்டும் எனவும் அச்சுறுத்தும் தொனியில் தெரிவித்துள்ளனர்.
அதற்குத் தவிசாளர் மறுப்பு தெரிவித்து பிரதேச சபைக்குச் சொந்தமான வீதியை விகாராதிபதியே அடாத்தாகக் கையகப்படுத்தி வைத்திருப்பதாகவும் வீதியை விடுவிக்க நடவடிக்கை எடுப்போம் எனவும் உறுதியாகத் தெரிவித்திருந்தார்.
மனு விசாரணை
அந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை வலி. வடக்கு பிரதேச சபை வீதியை மீட்கும் பணியைக் கைவிட வேண்டும் என்றும், அதற்கு எதிராக நீதிமன்றம் தடையுத்தரவு வழங்க வேண்டும் எனவும் பலாலி காவல்துறையினர் மல்லாகம் நீதிமன்றில் மனு தாக்கல் செய்தனர்.
குறித்த மனு மீதான விசாரணையின் போது, ஒருதலைப்பட்சமாக விசாரணை செய்ய முடியாது எனக் கூறிய நீதிமன்றம், வலி. வடக்கு தவிசாளர் மற்றும் பிரதேச சபை செயலாளர் ஆகியோரை நேற்றைய தினம் மன்றில் முன்னிலையாகுமாறு அழைப்பு விடுத்திருந்தது.

அதன் பிரகாரம், தவிசாளர் மற்றும் பிரதேச சபை செயலாளர் ஆகியோர் மன்றில் முன்னிலையான நிலையில், அவர்கள் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் முன்னிலையாகித் தமது தரப்பு வாதங்களை முன்வைத்தார்.
அதனைத் தொடர்ந்து, குறித்த வழக்கின் மீதான கட்டளைக்காக எதிர்வரும் 21ஆம் திகதிக்கு நீதிமன்றம் திகதியிட்டுள்ளது.
அதேவேளை, முறைப்பாட்டாளரான விகாராதிபதி மன்றில் முன்னிலையாகி இருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |